ஆசிரியை சல்வார் அணிவது தப்பா?
சென்னை:சல்வார் கமீஸ் உடையில் பிளஸ்டூ தேர்வுக் கண்காணிப்புப் பணிக்கு வந்த ஆசிரியையை, தேர்வு மையப் பள்ளியின் தலைமை ஆசிரியை திட்டிஅனுப்பிய விவகாரம் பெரும் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.
சென்னை டிஏவி மேல் நிலைப் பள்ளியில் ஆசிரியையாக இருப்பவர் சித்ரா. இவருக்கு தி.நகர் வெங்கட்நாராயணா சாலையில் உள்ள குண்டூர்சுப்பையா பிள்ளை மகளிர் மேல் நிலைப்பள்ளியில், பிளஸ்டூ தேர்வுக் கண்காணிப்பாளர் பணி வழங்கப்பட்டிருந்தது.
வியாழக்கிழமை தொடங்கிய பிளஸ் டூ தேர்வு கண்காணிப்புப் பணிக்காக சித்ரா சென்றார். சல்வார் கமீஸ் உடையில் அவர் இருந்தார். அவரைப்பார்த்ததும் சுப்பையா பிள்ளை பள்ளி தலைமை ஆசிரியை கிருஷ்ணகுமாரி சித்ராவை தடுத்து நிறுத்தினார்.
எங்களது பள்ளி வளாகத்திற்குள் யாரும் சல்வார் கமீஸ் உடையில் வரக் கூடாது. இது பள்ளி விதி. எனவே இந்த உடையில் உங்களை அனுமதிக்கமுடியாது என்று கோபமாக கூறினார்.
இதற்கு சித்ரா விளக்கம் அளிக்க முயன்றபோது அதை ஏற்க மறுத்த கிருஷ்ணகுமாரி, சல்வார் உடையில் நீங்கள் வந்தால் மாணவி யார், ஆசிரியையார் என்று எங்களுக்கு எப்படித் தெரியும்? வேறு உடையில் வருவதாக இருந்தால் வாருங்கள், இல்லாவிட்டால் உங்களை பணியாற்ற அனுமதிக்கமுடியாது என்று கண்டிப்பாக சொல்லி விட்டார்.
மாணவர்கள், ஆசிரியர்கள் முன்னிலையில் கிருஷ்ணகுமாரி இவ்வாறு கூறியதால் பெரும் அதிர்ச்சி அடைந்தார் சித்ரா. தனது நிலையில்பிடிவாதமாக இருந்த கிருஷ்ணகுமாரி, சித்ராவை தேர்வுக் கூடத்திற்குள் அனுமதிக்கவே இல்லை.
இந்த சம்பவம் பெரும் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது. இதுதொடர்பாக கிருஷ்ணகுமாரியிடம் கேட்டபோது, எங்களது பள்ளி விதிப்படி,ஆசிரியைகள் யாரும் சல்வார் கமீஸ், சுடிதார் அணிந்து வரக் கூடாது. பிறகு மாணவிக்கும், ஆசிரியைக்கும் எப்படி வித்தியாசம் காண முடியும்.?
மேலும் பிளஸ் டூ தேர்வுக் கண்காணிப்புப் பணிக்கு வரும் ஒரு ஆசிரியை சல்வார் கமீஸ் உடையில் வருவது நன்றாகவா இருக்கிறது? தனக்கு தமிழ்தெரியாது என்றும் சித்ரா கூறினார். தமிழ் தெரியாத கண்காணிப்பாளரை தமிழ் தேர்வைக் கண்காணிக்க எப்படி அனுமதிக்க முடியும்.அதனால்தான் அவரை திருப்பி அனுப்பினோம். மற்றபடி அவரை நாங்கள்அவமானப்படுத்தவில்லை என்றார் கிருஷ்ணகுமாரி.
இந்த சர்ச்சை விஸ்வரூபம் எடுத்துள்ளதால், இதுகுறித்து விசாரிக்க பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.












Click it and Unblock the Notifications