உண்ணாவிரதத்தில் குதிக்கிறார் ஜெயலலிதா
சென்னை:காவிரி நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பை அரசு கெஜட்டில் வெளியிடக் கோரி அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா தலைமையில், வருகிற 18ம்தேதி உண்ணாவிரதப் போராட்டம் நடைபெறவுள்ளது. சென்னையில் நடைபெறும் உண்ணாவிரதத்தில் ஜெயலலிதாவும் பங்கேற்கிறார்.
இதுதொடர்பாக ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கை:
காவிரி நடுவர் மன்றம் இறுதித் தீர்ப்பை வெளியிட்டு ஒரு மாதம் ஆகியும் திமுக அரசு தமிழக காவிரி டெல்டா விவசாயிகளுக்கு தண்ணீரைப்பெற்றுத் தர எவ்வித முயற்சியும், நடவடிக்கையும் எடுக்கவில்லை.
இறுதித் தீர்ப்பில் தமிழகத்திற்குப் பாதகமான அம்சங்கள் குறித்து நடுவர் மன்றத்தில் விளக்கம் கேட்கப் போவதாக அனைத்துக் கட்சிக் கூட்டத்தில்அறிவித்த பின்னரும், இன்று வரை நடுவர் மன்றத்தை தமிழக அரசு அணுகவில்லை.
அதிமுக கோரியதுபோல உச்சநீதிமன்றத்திலும் தமிழக அரசு மேல் முறையீடு செய்யவில்லை. அரசிதழில் இறுதித் தீர்ப்பை இடம் பெறச் செய்து,குறைந்தபட்ச நீரையாவது தமிழக விவசாயிகளுக்குப் பெற்றுத் தர உதவ வேண்டும் என்ற முயற்சியிலும் திமுக அரசு இறங்கவில்லை.
16 ஆண்டு காலமாகப் போராடிப் பெற்ற காவிரி நடுவர் மன்றத் தீர்ப்பை செயல்படுத்த எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளாத மத்திய, மாநிலஅரசுகளைக் கண்டித்தும், இறுதித் தீர்ப்பை உடனடியாக மத்திய அரசிதழில் வெளியிட வேண்டும் என வற்புறுத்தியும் 18.3.2007 அன்றுஞாயிற்றுக்கிழமை அனைத்து மாவட்டத் தலைநகரங்களிலும் ஒரு நாள் அடையாள உண்ணாவிரதப் போராட்டம் நடைபெறும்.
சென்னையில் நடைபெறும் போராட்டத்திற்கு நானே தலைமை ஏற்கிறேன். கழகத்தின் சார்பில், மற்ற மாவட்டங்களில் நடைபெற உள்ளஉண்ணாவிரதப் போராட்டங்களுக்குத் தலைமை ஏற்போர் பட்டியல் விரைவில் அறிவிக்கப்படும் என்று கூறியுள்ளார் ஜெயலலிதா.
காவிரிப் பிரச்சினையில் விரைவில் நேரடிப் போராட்டத்தில் அதிமுக குதிக்கும் என்று ஜெயலலிதா கூறியிருந்தார். இந்த நிலையில் உண்ணாவிரதப்போராட்டத்தை அறிவித்துள்ள ஜெயலலிதா, தானே தலைமை ஏற்கப் போவதாகவும் கூறியுள்ளார்.
அதேசமயம், நீண்ட இடைவெளிக்குப் பிறகு ஜெயலலிதா தலைமையில் போராட்டம் நடைபெறவுள்ளதால், அதிமுகவினர் உற்சாகமடைந்துள்ளனர்.












Click it and Unblock the Notifications