ராமநாதபுரத்தில் 13ம் தேதி பந்த்
ராமநாதபுரம்:இலங்கை கடற்படையினரின் வெறியாட்டத்தைக் கண்டித்து வருகிற 13ம் தேதி ராமநாதபுரத்தில் முழு அடைப்பு நடத்த காங்கிரஸ் கட்சி அழைப்புவிடுத்துள்ளது.
இலங்கை கடற்படையினரின் வெறித் தாக்குதலுக்கு இன்னொரு தமிழக மீனவர் அநியாயமாக பலியாகியுள்ளார். நேற்று நடந்த துப்பாக்கிச் சூட்டில்பாம்பன் பகுதியைச் சேர்ந்த கிறிஸ்டோபர் என்ற மீனவர் கொல்லப்பட்டார்.
இதனால் ராமநாதபுரம் மாவட்ட மீனவர்கள் கொந்தளித்துப் போயுள்ளனர். ராமநாதபுரம், பாம்பன், ராமேஸ்வரம் உள்ளிட்ட அனைத்துப்பகுதிகளிலும் மீனவர்கள் கடும் ஆத்திரமாக உள்ளனர்.
நேற்று பாம்பனில் உள்ள ம்ேபாலத்தில் பல மணி நேரம் சாலை மறியல் நடந்தது. இதனால் ராமேஸ்வரத்திற்கும், பாம்பனுக்கும் இடையே சாலைப்போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது.
பலியான கிறிஸ்டோபரின் வீட்டுக்குச் சென்ற அமைச்சர் சுப.தங்கவேலன், குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்து கிறிஸ்டோபரின்குடும்பத்தாரிடம் தமிழக அரசின் ரூ. 1 லட்சம் நிதியுதவியையும் வழங்கினார்.
தொடர்ந்து ராமேஸ்வரம் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் பதட்டம் நிலவி வருவதால் போலீஸார் அதிக அளவில் குவிக்கப்பட்டுள்ளனர்.கடலுக்கு மீன் பிடிக்கப் போயுள்ள இப்பகுதிகளைச் சேர்ந்த மீனவர்கள் பத்திரமாக திரும்புவதை உறுதி செய்ய கடலோரக் காவல்படையும்,கடற்படையும் உஷார்படுத்தப்பட்டுள்ளன.
இந்த நிலையில், ராமநாதபுரம் சட்டசபைத் தொகுதியில் 13ம் தேதி முழு அடைப்பு நடத்தப் போவதாக அத்தொகுதி காங்கிரஸ் உறுப்பினர் ஹசன்அலி அறிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில்,கச்சத்தீவு பகுதியில் ஆண்டாண்டு காலமாக தமிழக மீனவர்களும், இலங்கை மீனவர்களும் எந்த சச்சரவும் இன்றி மீன்பிடித்து வந்தனர். ஆனால் 1983ம் ஆண்டுக்குப் பிறகு நிலைமை மாறியது.
கச்சத்தீவு எங்களுக்குச் சொந்தம். அப்பகுதியில் மீன் பிடிக்கக் கூடாது என்று கூறிய இலங்கை கடற்படை, அப்பகுதியில் மீன்பிடிக்கப் போகும்தமிழர்களை குருவி சுடுவது போல சுடத் தொடங்கியது. இன்று வரை மொத்தம் 253 பேர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர்.
கச்சத்தீவை இலங்கைக்கு நாம் தாரை வார்த்துக் கொடுத்தபோது, தமிழக மீனவர்கள் கச்சத்தீவில் தங்கிச் செல்லலாம், மீன் பிடிக்கலாம் எனஒப்பந்தத்தில் கூறப்பட்டது. ஆனால் அதை இலங்கை தூக்கிப் போட்டு விட்டது. தொடர்ந்து தமிழக மீனவர்களை சுட்டுத் தள்ளி வருகின்றனர்.
இதுதொடர்பாக மத்திய, மாநில அரசுகள் பலமுறை கண்டித்தபோதிலும் இலங்கை அரசு அதுகுறித்துக் கவலைப்படுவதாக தெரியவில்லை.
இந்த இனவெறித் தாக்குதலை கண்டித்து 13ம் தேதி ராமநாதபுரம் சட்டசபைத் தொகுதி முழுவதும் முழு அடைப்பு நடத்தப்படும் என்றார் அவர்.












Click it and Unblock the Notifications