ஜெ. உண்ணாவிரத நாளில் உள்ளாட்சி தலைவர்கள் மாநாடு!
சென்னை:அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா உண்ணாவிரதம் இருக்கப் போகும் 18ம் தேதியன்று, முதல்வர் கருணாநிதி தலைமையில் சென்னையில்தமிழக உள்ளாட்சி அமைப்புகளின் தலைவர்கள் மாநாடு நடைபெறவுள்ளது.
சென்னை கலைவாணர் அரங்கில் காலை 9.30 மணிக்கு தொடங்கும் மாநாட்டை முதல்வர் கருணாநிதி தொடங்கி வைத்து சிறப்புரையாற்றுகிறார்.
இந்த மாநாட்டில், சென்னை, மதுரை, கோவை, திருச்சி, சேலம், திருநெல்வேலி ஆகிய 6 மாநகராட்சிகளின் மேயர்கள், 152 நகராட்சிகளின்தலைவர்கள், 561 பேரூராட்சிகளின் தலைவர்கள், 385 பஞ்சாயத்து ஒன்றிய தலைவர்கள், 29 மாவட்ட பஞ்சாயத்து தலைவர்கள் பங்கேற்கிறார்கள்.
புதிதாக தேர்வு செய்யப்பட்ட நகர உள்ளாட்சி பிரதிகள் பெயர் விபரம் அடங்கிய புத்தகத்தை நகராட்சி நிர்வாகத்துறை கொண்டு வருகிறது.எம்.எல்.ஏ, எம்.பி.க்களுக்கு உள்ளது போல் பெயர், முகவரி உள்ளிட்ட விபரங்கள் அடங்கிய கையேடு போல, முதன் முறையாக உள்ளாட்சிஅமைப்புகளின் தலைவர்களுக்கும் தயாரிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு முழுவதும் உள்ள நகர்ப்புற உள்ளாட்சி பிரதிநிதிகள் 4600 பேரின் முழு விபரங்களும் இதில் இடம் பெற்றிருக்கும். இந்த கையேடு,அணைத்து உள்ளாட்சி அமைப்புகளிலும், மாநகராட்சி மற்றும் அரசு துறை அலுவலகங்களிலும் கிடைக்கும்.
இந்த கையேடு விரைவில் தமிழக அரசின் இணைய தளத்திலும் வெளியிடப்படவுள்ளது. இணையதளத்தின் முகவரி: www.tnulbs.tn.gov.in
இந்த மாநாடு நடைபெறும் அதே நாளில்தான் சென்னை வள்ளுவர் கோட்டம் எதிரே, காவிரி நடுவர் மன்றத் தீர்ப்பை அரசு கெஜட்டில் வெளியிடக்கோரி அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா உண்ணாவிரதம் இருக்கப் போகிறார் என்பது நினைவிருக்கலாம்.












Click it and Unblock the Notifications