படிக்காதவன் பாணியில் கஞ்சா கடத்திய சரசு
சேலம்:கஞ்சா பொட்டலங்களை வயிற்றில் மறைத்து கர்ப்பிணி போல நடித்து கஞ்சா கடத்திய பெண்ணை சேலம் போலீஸார் கஞ்சாவும், கையுமாகபிடித்தனர்.
படிக்காதவன் படத்தில் ஒரு காட்சி வரும். அதாவது, ஹீரோயின் அம்பிகா, சாராய பாட்டில்களை தனது வயிற்றைச் சுற்றிக் கட்டிக் கொள்வார்.வெளியிலிருந்து பார்ப்பவர்களுக்கு அவர் கர்ப்பிணி போலத் தெரிவார். இப்படியாக அவர் சாராயக் கடத்தில் ஈடுபட்டிருப்பார்.
இதே பாணியைக் கடைப்பிடித்து சேலத்தில் சரசு என்ற பெண் கஞ்சா கடத்தி போலீஸாரிடம் சிக்கியுள்ளார். சேலம் போதைப் பொருள் தடுப்புப்பிரிவு போலீஸார் வழக்கமான ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனர்.
புதிய பேருந்து நிலையத்தில் அவர்கள் வந்து கொண்டிருந்தபோது ஒரு கர்ப்பிணிப் பெண் போலீஸாரைப் பார்த்து பயந்து வேகமாக நடக்கஆரம்பித்தார். இதையடுத்து போலீஸார் அப்பெண்ணை மடக்கி நிறுத்தினர்.
அந்தப் பெண்ணின் வயிற்றைப் பார்த்த போலீஸாருக்கு சந்தேகம் வந்தது. உடனடியாக பெண் போலீஸை வரவழைத்த போலீஸார், அப்பெண்ணைசோதனையிட்டனர். அப்போது தனது வயிற்றில் ஒன்றரை கிலோ கஞ்சாவை பொட்டலங்களாக மடித்து கட்டியிருந்தது தெரிய வந்தது.
கர்ப்பிணி போல அவர் நடித்து கஞ்சா கடத்தியுள்ளார். அவரது பெயர் சரசு. 30 வயதாகும் அவர் நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் அருகேஉள்ள பொத்தனூரைச் சேர்ந்தவர். இவரது கணவர் பெயர் முருகேசன்.
இந்தக் கஞ்சாவை ஆந்திர மாநிலம் குப்பத்திலிருந்து வாங்கி வந்ததாக போலீஸாரிடம் தெரிவித்தார் சரசு. இதையடுத்து அவரை போலீஸார் கைதுசெய்தனர்.












Click it and Unblock the Notifications