பெரியாரில் நாகம்மை புறக்கணிப்பு-இளங்கோவன்
சென்னை:பெரியார் படத்தில் அவரது மனைவி நாகம்மையார் குறித்த பல விஷயங்கள் புறக்கணிக்கப்பட்டுள்ளன. அது ஏன் என்று புரியவில்லை என மத்தியஜவுளித்துறை இணை அமைச்சர் ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் கூறியுள்ளார்.
சேலம் வந்த இளங்கோவன் அங்கு செய்தியாளர்களிடம் பேசுகையில், பெரியார் படத்தில் சத்யராஜ் மிகச் சிறப்பாக நடித்துள்ளார். அதற்காகஅவரைப் பாராட்டுகிறேன். மாபெரும் தலைவராகிய பெரியார் பெயரில் படம் வந்துள்ளது வரவேற்புக்குரியது, பாராட்டுக்குரியது.
ஆனால் பெரியார் படம் ஏன் இன்னும் ரிலீஸ் ஆகாமல் தாமதமாகி வருகிறது என்பது தெரியவில்லை. இந்தப் படத்திற்காக கி.வீரமணி நாடுமுழுக்கச் சுற்றி நிறையப் பணம் வசூலித்துள்ளார். அரசும் கூட அள்ளிக் கொடுத்துள்ளது. டெல்லியில் போய்க் கூட நிதி வசூல் செய்துள்ளனர்.
இப்படி பணத்திற்குப் பஞ்சமே இல்லாமல் நிறையவே கொடுக்கப்பட்டுள்ளது. அப்படி இருந்தும் படம் ஏன் இன்னும் வெளியாகாமல் தாமதமாகிவருகிறது என்பதுதான் புரியவில்லை.
இப்படத்தில் சில குறைகள் இருப்பதாகவும் எனக்குத் தெரிய வந்துள்ளது. குறிப்பாக பெரியாரின் மனைவி நாகம்மையார் குறித்த பல விஷயங்கள்படத்தில் கூறப்படவில்லை. அவரது காட்சிகளே கூட குறைவாகத்தான் உள்ளதாக கூறப்படுகிறது.
மேலும் பெரியார் ஆரம்ப காலத்தில் காங்கிரஸ் கட்சியில் தீவிரமாக செயல்பட்டது குறித்தும் சரியாக விளக்கப்படவில்லை. சுதந்திரப் போராட்டத்தில்அவர் ஈடுபட்டது குறித்தும் காட்சிகள் இல்லை என்று தெரிகிறது.
பெரியார் நடத்தி வந்த கள்ளுக்கடை போராட்டத்தை எப்போது நிறுத்தப் போகிறீர்கள் என்று ஒருமுறை பெரியாரிடம் காந்தி கேட்டுள்ளார்.அதற்குப் பெரியார், நாகம்மையிடம் கேட்டுச் சொல்கிறேன் என்று கூறினாராம். இந்தக் காட்சி படத்தில் இல்லை. இது வருத்தத்திற்குகரியது,ஏமாற்றம் தருவதாக உள்ளது.
பெரியார் குடும்பத்தைச் சேர்ந்தவன் என்ற முறையில் இதை நான் கூறவில்லை. காங்கிரஸ்காரன் என்ற வகையில் கேட்கிறேன்.
உயர்நீதிமன்றத்தில் ஆங்கிலம் மட்டுமே இருக்க வேண்டும் என்று நான் கூறவில்லை. ஆங்கிலத்தோடு தமிழும் இருக்கலாம் என்றுதான் கூறினேன்.மற்றபடி பெரியாரின் பேரனான எனக்கு தமிழ் மீது எந்தத் துவேஷமும் இல்லை என்றார் இளங்கோவன்.












Click it and Unblock the Notifications