6 நாட்களுக்கு ஸ்தம்பிக்கப் போகும் வங்கிகள்
மும்பை:தேசியமயமாக்கப்பட்ட வங்க ஊழியர்கள் வருகிற 28ம் தேதி முதல் 3 நாட்களுக்கு வேலைநிறுத்தம் செய்யத் திட்டமிட்டுள்ளனர். அதற்கு முன்பும்,பின்பும் விடுமுறை நாட்கள் என்பதால் 6 நாட்களுக்கு வங்கிப் பணிகள் கடுமையாக பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது.
வங்கிப் பணிகளை அவுட்சோர்சிங்க்கு விடுவது, கருணை அடிப்படையில் வேலை தருவதை நிறுத்தி வைத்தது, பென்சன் வாய்ப்பை வங்கிஊழியர்களுக்கு தராதது போன்றவற்றை கண்டித்து வங்கி ஊழியர்கள் போராட்டம் நடத்தவுள்ளனர்.
பாரத ஸ்டேட் வங்கி உள்பட 27 வங்கிகள் இந்த போராட்டத்தில் பங்கேற்கின்றன. மொத்தம் 10 லட்சத்திற்கும் அதிகமான ஊழியர்கள் இதில் கலந்துகொள்ளவுள்ளனர்.
ஊழியர்கள் 3 நாட்களுக்குத்தான் போராட்டம் நடத்துகின்றனர். ஆனால் 30, 31, 1 ஆகிய நாட்கள் அரசு விடுமுறை நாட்கள். ஏப்ரல் 2ம் தேதிவங்கிகளுக்கான ஆண்டுக் கணக்கை முடிக்கும் நாள். எனவே அன்றும் வங்கிகளுக்கு விடுமுறை.
எனவே 6 நாட்களுக்கு பொதுமக்கள் வங்கியிலிருந்து பணம் எடுக்கவும், போடவும் முடியாமல் திணறப் போகிறார்கள்.
இந்த வேலைநிறுத்தத்தில், ஐ.சி.ஐ.சி.ஐ., யூ.டி.ஐ, எச்.டி.எப்.சி. மற்றும் செஞ்சுரியன் வங்கி உள்ளிட்ட தனியார் வங்கிகள் வழக்கம்போல் செயல்படும்.
இதைப்பற்றி அகில இந்திய வங்கி ஊழியர்கள் சங்க இணைச் செயலாளர் விஸ்வாஸ் உத்தகி கூறுகையில், இந்த ஸ்டிரைக்கின் போது ஏடிஎம் திறந்துஇருந்தாலும் கூட ஒன்றிரண்டு நாட்களில் அவற்றில் பணம் இருக்காது என்றார்.
நிதியாண்டு முடிவடையும் நிலையில் ஸ்டிரைக் நடப்பதால் வரி வசூல் பாதிக்கப்படும். இதனால் முன்னதாகவே வரி கட்டிவிடுமாறு வருமான வரித்துறை கேட்டுக் கொண்டுள்ளது.
இதில் என்ன கொடுமை என்றால், கிரெடிட் கார்டுகளை வழங்கியுள்ள வங்கிகள், கார்டில் பணம் செலுத்த பெரும்பாலும் மாத கடைசி தினம் அல்லது1, 2ம் தேதிகளை கடைசி தேதியாக வைத்துள்ளன.
தற்போது ஸ்டிரைக் நடப்பதால், பெரும்பாலான வாடிக்கையாளர்களால் உரிய தேதியில் பணம் செலுத்த முடியாமல் போகும். இதன் மூலம் அபராதவசூல் அமோகமாக இருக்கும் என கணக்குப் போட்டுள்ளனவாம்.
எனவே, பணம் எடுக்க, போட நினைப்பவர்கள் இந்த 6 நாட்களுக்கு முன்பாகவே அந்த வேலையை செய்து விடுவது நல்லது.












Click it and Unblock the Notifications