கண்ணீருடன் விடைபெற்றார் இன்சமாம்
கிங்ஸ்டன்:இன்ஸி என கிரிக்கெட் ரசிகர்களால் செல்லமாக அழைக்கப்படும் பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் கேப்டன் இன்சமாம் உல் ஹக் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டிலிருந்து நேற்று கண்ணீர் மல்க விடை பெற்றார்.
பாகிஸ்தான் கிரிக்கெட் அணிக்குக் கிடைத்த சிறந்த கேப்டன்களில் இன்சமாமும் ஒருவர். சிறந்த வீரரான இன்சமாமின் கேப்டன் பதவிக்காலம் முள்பாதையாகவே இருந்தது.சக வீரர்களுடன் அடிக்கடி சர்ச்சையில் சிக்கிய இன்சமாமின் கிரிக்கெட் வாழ்க்கை, பயிற்சியாளர் பாப் உல்மரின் மர்ம மரணம், உலகக்கோப்பைப்போட்டியிலிருந்து பாகிஸ்தான் அசிங்கப்பட்டு வெளியேறியது ஆகிய சோகச் சுவடுகளுடன் முடிவுக்கு வந்துள்ளது.
37 வயதாகும் இன்சமாம் நேற்று நடந்த ஜிம்பாப்வே அணியுடனான ஒரு நாள் போட்டியுடன் தனது ஒரு நாள் கிரிக்கெட் வாழ்க்கையை முடித்துக்கொண்டார்.
1991ம் ஆண்டு நவம்பர் 22ம் தேதி மேற்கு இந்தியத் தீவுகள் அணிக்கு எதிரான ஒரு நாள் போட்டியில் விளையாட ஆரம்பித்த இன்சமாம் இதுவரை377 ஒரு நாள் போட்டிகளில் விளையாடியுள்ளார். 11,702 ரன்களைக் குவித்துள்ளார். பத்து சதம், 83 அரை சதங்களை எடுத்துள்ளார்.
1992ம் ஆண்டு இங்கிலாந்துக்கு எதிராக பாகிஸ்தான் பிரிமிங்காமில் மோதிய டெஸ்ட் போட்டிதான் இன்சமாமின் முதல் டெஸ்ட் போட்டி. 119டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள இன்சமாம், 8,813 ரன்களைக் குவித்துள்ளார். 25 சதங்கள், 46 அரை சதங்களை எடுத்துள்ளார்.
வலது கை ஆட்டக்காரான இன்சமாம், ரன் அவுட் ஆவதில் சாதனை படைத்தவர். ஸ்டைலான பேட்டிங் திறமையுடன் கிரிக்கெட் உலகில் ஜொலித்தஇன்சமாம், ஓய்வு பெற்றிருப்பது பாகிஸ்தான் அணிக்கு சற்றே பலவீனமா ஒன்றுதான்.
நேற்றைய கடைசிப் போட்டியில் பேட்டிங் செய்து வெளியேறிய இன்சமாம் கண்களிலிருந்து பெருகிய கண்ணீரை அடக்க முடியாமல்வெளியேறினார். அவருக்கு ஜிம்பாப்வே வீரர்களும், பாகிஸ்தான் வீரர்களும் கைகுலுக்கி விடை கொடுத்தனர்.












Click it and Unblock the Notifications