மதுவுக்கு எதிராக கடும் போராட்டம்: ராமதாஸ்
திண்டிவனம்:தமிழகத்தில் முழுமையான மது விலக்கை அமல்படுத்தக் கோரி பாமக மகளிர் சங்கம் சார்பில் மிகக் கடுமையான, நேரடிப் போராட்டத்தை பாமகநடத்தவுள்ளதாக கட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார்.
திண்டிவனம் அருகே உள்ள தைலாபுரம் தோட்டத்தில் உள்ள தனது இல்லத்தில் செய்தியாளர்களிடம் பேசினார் ராமதாஸ். திமுக அரசின்கொள்கைகள் குறித்து விரிவாக பேசிய அவர் மது விற்பனை குறித்து மிகக் கடுமையாக பேசினார்.
காரசாரமான ராமதாஸின் பேட்டி விவரம்:
தமிழகத்தில் முந்தைய திமுக ஆட்சியின்போது 4,000 மதுக் கடைகளை திறந்தார் கருணாநிதி. அடுத்து வந்த அதிமுக ஆட்சியில் இது 8,000கடைகளாக உயர்ந்தது. நான் சொல்வது என்னவென்றால் முதலில் இந்தக் கடைகளை பாதியாக குறையுங்கள். மது விலக்கை முழுமையாகஅமல்படுத்த முயற்சியுங்கள்.
மதுவின் தீமை பற்றி பாமக மகளிர் பிரிவினர் கிராமங்களில் பிரச்சாரம் செய்ய உள்ளனர். பிரச்சார தேதி குறித்து முடிவு செய்யப்படவுள்ளது.மதுவிலக்கு தொடர்பாக அடுத்த கட்டமாக மகளிர் அணியினர் நேரடி நடவடிக்கையில் இறங்குவார்கள்.
லட்சக்கணக்கான மகளிர் பங்கேற்கும் அந்த போராட்டம் கடுமையாக இருக்கும். சிறை செல்லவும் தயங்க மாட்டார்கள். லாட்டரி, சூதாட்டம், சினிமாபோதை ஆகியவற்றிலிருந்து மக்கள் விடுபட வேண்டும்.
முதல்வர் கருணாநிதி இதற்கு வழிகாண வேண்டும். காவல்துறையினர் இன்னும் வேகமாக செயல்பட வேண்டும்.
திமுகவினர் இணக்கமாக இல்லை:
சில மாவட்டங்களை தவிர மற்ற மாவட்டங்களில் திமுகவினர் மற்ற கூட்டணி கட்சியினருடன் இணக்க மாக இல்லை. இந்த நிலைமையை சீராக்கவேண்டும். அவர்களுக்கு கருணாநிதி அறிவுறுத்தி நிலைமையை சரி செய்யவேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.
பாமகவின் நிலைப்பாடு என்ன என்பது கருணாநிதிக்குத் தெரியும். கூட்டணிக் கட்சிகளை எப்படி நடத்த வேண்டும், மதிக்க வேண்டும் என்பதும்அவருக்குத் தெரியும்.
சில மாவட்டங்களில் குட்டி சமஸ்தானங்கள் போல திமுகவினர் செயல்படுகின்றனர். தலைமையின் விருப்பத்திற்கு மாறாக கட்டளைகளை மாறி மாறிபிறப்பித்துக் கொண்டிருக்கின்றனர்.
கூட்டணிக் கட்சியினரை, கூட்டணிக் கட்சிகளின் எம்.எல்.ஏக்களை, எம்.பிக்களை மதிக்க மறுக்கிறார்கள். தேவையில்லாமல் தலையிடுகிறார்கள்என்று புகார் வேறு கூறுகிறார்கள். சேலம் மாவட்ட நிகழ்வுகள் இதன் வெளிப்பாடுகள்தான்.
தமிழகத்தைப் பொறுத்த வரையில் திமுக தனித்து ஆட்சி அமைத் திருக்கிறது. அமைச்சரவையில் இடம் பெறாமல் பாமக திமுக அமைச்சர வைக்குஆதரவு அளித்து வருகிறது.
கருணாநிதி தலைமையிலான திமுக அரசு தொடர்ந்து 5 ஆண்டுகள் பதவியில் நீடித்திருப்பதற்கு பாமக ஆதரவு அளித்து வரும் என்று ஏற்கனவேபாமக பிரகடனப்படுத்தி இருக்கிறது. அந்த அரசியல் நிலைப் பாட்டில் இம்மி அளவுக் கூட மாற்றம் இல்லை. இனியும் அந்த நிலைப்பாட்டை மாற்றிக்கொள்ள மாட்டோம்.
சில வாரப் பத்திரிகைகளும், சில நாளேடுகளும் தொடர்ந்து பாமகவைப் பற்றி வேண்டுமென்றே தவறான செய்திகளை வெளியிட்டுக் குழப்பத்தைஏற்படுத்த முயல்கின்றன.
எங்கள் நிலைப்பாட்டில் மாற்றம் இல்லை என்று சொல்லி வருவதை உறுதிப்படுத்துவதற்கு பச்சைக் குத்திக் கொள்ளவா முடியும்? பச்சைக் குத்திக்கொள்ள வேண்டும் என்று முன்பு எம்.ஜி.ஆர். சொன்னபோது அது காட்டுமிராண்டித்தனம் என்று இதே பத்திரிகைகள்தான் எழுதியிருக் கின்றன.
வாய் மூடிக் கொண்டிருக்கவா முடியும்?
கூட்டணியில் இருக்கிறோம், அரசை ஆதரிக்கிறோம் என்பதற்காக எங்களது கருத்துக்களை சொல்லக் கூடாது என்பது அர்த்தமல்ல. அதுவும் எங்கள்கட்சியின் நிலைப் பாட்டிற்கும், கடந்த காலங்களில் எங்கள் கட்சி வலியுறுத்தி வந்த கோட்பாடுகளுக்கும் எதிராக திட்டங்கள், அறிவிப்புகள் வரும்போது நாங்கள் எப்படி வாய் மூடிக் கொண்டிருக்க முடியும்?
எம்ஜிஆர் முதலமைச்சராக இருந்த போது நுழைவுத் தேர்வைக் கொண்டு வந்தார். கடுமையாக எதிர்த்தோம். ஜெயலலிதா முதலமைச்சராகஇருந்தபோதும் எதிர்த்தோம். நுழைவுத் தேர்வை நீக்கம் செய்ய வேண்டும் என்று வலியுறுத்தினோம்.
இப்போது கருணாநிதி இருக்கிறார். நுழைவுத் தேர்வை ரத்து செய்யுங்கள் என்று வாதாடினோம். அதில் வெற்றி பெற்றுள்ளோம்.
இதேபோல, துணை நகரம், சிறப்புப் பொருளாதார மண்டலங்கள் என்று அறிவிக்கப்பட்ட போது அதற்காக விவசாய விளை நிலங்களைக் எடுக்கக்கூடாது என்று வாதாடினோம்.
இன்னும் சொல்வதனால், நாட்டிலேயே முதன் முதலில் இதற்கு எதிர்ப்புக் குரல் கொடுத்தது நாங்கள்தான். இன்றைக்கு மேற்கு வங்கம் சிங்கூரிலும்,நந்தி கிராமிலும் எதிர்ப்பு வந்திருக்கிறது என்றால் இங்கே நாங்கள் எதிர்ப்புக் குரல் எழுப்பியதற்குப் பிறகுதான்.
இங்கே நாங்கள் எதிர்ப்புக்குரல் கொடுத்ததற்குப் பின்னால் முதலமைச்சர் கருணாநிதி விவசாய விளை நிலங்களை எடுக்க மாட்டோம், குடியிருப்புப்பகுதிகளை அகற்ற மாட்டோம் என்று உத்தரவாதம் தந்திருக்கிறார்.
இதன் காரணமாக, தமிழகத்திலும், நந்திகிராம், சிங்கூர் நிகழ்வுகள் நடை பெறாமல் தடுத்திருக்கிறோம் என்றால் மிகையாகாது. இதற்காக என்னைபற்றியும், பாமகவின் நிலைப்பாட்டை பற்றியும் சில பத்திரிகைகள் வேண்டுமானால் சிண்டு முடிகிற வேலையில் ஈடுபடலாம். ஆனால் கருணாநிதி,மனதிற்குள் என்னை வாழ்த்திக் கொண்டிருப்பார்.
பாமக தடுத்த ஜாலியன்வாலாபாக்:
மேற்கு வங்கத்தில் நடந்த படுகொலைகளைப் பற்றி ஜாலியன் வாலாபாக் படுகொலைகள் என்று வர்ணிக்கிறார்கள். இங்கே நாங்கள் எதிர்ப்புக்குரல்எழுப்பி கருணாநிதி தனது நிலைப்பாட்டை வெளிப்படுத்தாமல் இருந்திருந்தால் இங்கேயும் ஒரு ஜாலியன் வாலாபாக் நடந்திருக்காது என்பதற்குஎன்ன உத்தரவாதம்?
சென்னை விமான நிலைய விரிவாக்கப் பணிகளுக்காக அருகாமையில் உள்ள பல குடியிருப்புகளை அகற்றும் நிலைமை ஏற்பட்டபோது அங்குள்ளமக்கள் எதிர்த்தார்கள். அவர்களுக்கு நாங்கள் ஆதரவு அளித்தோம்.
கூட்டணியில் இருந்து வெளியேறப் போகிறார்கள் என்று வதந்திகளைப் பரப்புவது எந்த வகையில் நியாயம்? ஜெயலலிதா ஆட்சியில் நாங்கள்எதிர்த்த காரியத்தை இந்த ஆட்சியில் எதிர்க்காமல் இருக்க முடியுமா? கூட்டணியில் இருக்கிறோம் என்பதற்காக எதிர்க்காமல் இருக்க முடியுமா?அப்படி எதிர்க்காமல் இருந்தால் எங்களைப் பற்றி மக்கள் என்ன நினைப்பார்கள்?
அரசுக்கு ஆலோசனை வழங்குவதற்காகவே, இந்த அரசுக்கு நல்லது செய்ய வேண்டும் என்பதற்காகவே எங்கள் கருத்துக்களை ஆலோசனைகளாகஎடுத்துக் கூறுகிறோம். அதனால்தான் முதல்வர் கருணாநிதி எங்கள் ஆலோசனைகளை எல்லாம் தைலாபுரத்து "தைலம் என்று எடுத்துகொண்டிருக்கிறார்.
குமாரசாமியால் புண்ணியம் இல்லை:
காவிரி தீர்ப்பு தொடர்பாக பேசுவோம் வாருங்கள் என்று குமாரசாமி அறிவித் திருக்கிறார். நம்முடைய முதலமைச்சரும் அதற்குசம்மதித்துவிட்டதாகத் தெரிவித்திருக்கிறார். பேச்சு வார்த்தை வேண்டாம்.
நிஜலிங்கப்பா முதல் தரம்சிங் வரையில் 12 கர்நாடக முதலமைச்சர்களுடன் பேச்சு வார்த்தை நடத்தி சாதிக்க முடியாததை, குமாரசாமியுடன் பேச்சுவார்த்தை சாதிக்கவா முடியும்?
அதிலும், முன்னாள் பிரதமர் என்பதையே மறந்து விட்டு தமிழகத்திற்குத் தண்ணீர் கொடுக்கக் கூடாது என்று நாடாளுமன்றத்தின் முன்பு தெருவில்உட்கார்ந்து போராட்டம் நடத்திய தேவே கெளடாவின் மகனான குமாரசாமியிடம் பேச்சு வார்த்தை நடத்துவதில் எந்த பிரயோசனமும் இல்லை.
இப்படியெல்லாம் பேசுவதால், திமுக அரசை எதிர்க்கிறோம், திமுக கூட்டணியில் இருந்து விலகப் போகிறோம் என்பது அர்த்தமல்ல. சரி என்றுதோன்றினால் பாராட்டுகிறோம். தவறு என்று நினைத்தால் சுட்டிக் காட்டுகிறோம் என்றார் ராமதாஸ்.












Click it and Unblock the Notifications