துணை நகரம் கண்டிப்பாக தேவை: காங்.
சென்னை:எத்தகைய எதிர்ப்புகள் வந்தாலும் சென்னை அருகே துணை நகரம் அமைக்கப்பட்டே ஆக வேண்டும் என்று வேலூர் தொகுதி காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் ஞானசேகரன் சட்டசபையில் வலியுறுத்தினார்.
சட்டசபையில் நடந்த பட்ஜெட் மீதான பொது விவாதத்தில் கலந்து கொண்டு ஞானசேகரன் பேசுகையில், வேலூரில் சட்டக் கல்லூரி, விமான நிலையம், தோல் பதனிடும் தொழிற்சாலை, தொழில்நுட்பப் பூங்கா ஆகியவற்றை அமைக்க வேண்டும்.
வேலூர், ஈரோடு, திருப்பூர் ஆகிய நகராட்சிகளை தரம் உயர்த்தி மாநகராட்சிளாக அறிவிக்க வேண்டும்.
கூட்டணிக் கட்சிகள் இடித்துப் பேசலாம் என்று கூறியுள்ளார் முதல்வர் கருணாநிதி. 1991ம் ஆண்டு விடுதலைப் புலிகளால் எங்களது தலைவர் ராஜீவ் காந்தியை நாங்கள் இழந்தோம். இன்று விடுதலைப் புலிகளின் நடமாட்டம் தமிழகத்தில் பெருகியுள்ளது. சில கட்சிகள் புலிகளுக்கு ஆதரவாக செயல்படுகின்றனர்.
புலிகளின் நடமாட்டத்தை அடியோடு ஒழிக்க வேண்டும். அவர்களுக்கு ஆதரவு கொடுக்கும் இயக்கங்களை முதலில் ஒடுக்க வேண்டும். கடந்த பிப்ரவரி மாதத்தில் மட்டும் 8 விடுதலைப் புலிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். திமுக, மதிமுகவைச் சேர்ந்தவர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சென்னை அருகே துணை நகரம் அமைக்கும் திட்டத்தை கைவிட்டு விடக் கூடாது. எதிர்ப்புகளை சமாளித்து அத்திட்டத்தை கண்டிப்பாக நிறைவேற்ற வேண்டும் என்றார் ஞானசேகரன்.












Click it and Unblock the Notifications