அரசுப் பேருந்துகள் தனியார்மயமாகாது: நேரு
சென்னை:அரசு போக்குவரத்துக் கழகங்களை தனியார் மயமாக்கும் எண்ணம் இல்லை என்று தமிழக போக்குவரத்துத் துறை அமைச்சர் கே.என்.நேரு சட்டசபையில் தெரிவித்தார்.
சட்டசபையில் இன்று மார்க்சிஸ்ட் உறுப்பினர் மகேந்திரன் பேசுகையில், அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகத்திற்கு தனியார் பேருந்துகளை வாடகைக்கு அமர்த்தும் அரசின் திட்டம், பின் வாசல் வழியாக தனியார் மயத்தை கூட்டி வருகிறதோ என்ற சந்தேகத்தை எழுப்புகிறது என்றார்.
இதற்கு போக்குவரத்து அமைச்சர் நேரு பதிலளிக்கையில், அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகத்தில் மொத்தம் 920 பேருந்துகள் உள்ளன. இவற்றில் 110 பேருந்துகள்தான் புதியவை. மற்றவை அனைத்தும் பழைய, மோசமான நிலையில் உள்ள பேருந்துகள்.
விரைவுப் போக்குவரத்துக் கழக ஊழியர்களுக்கு கொடுக்க வேண்டிய நிலுவைத் தொகை ரூ. 26 கோடியாக உள்ளது. தொடர்ந்து நஷ்டத்தில் இயங்கிக் கொண்டிருப்பதை விட பேசாமல் போக்குவரத்துக் கழகத்தை மூடி விடலாம் என்று நிதித்துறை ஆலோசனை கூறியது.
ஆனால் ஊழியர்களின் நலனைக் கருத்தில் கொண்டு அந்த நடவடிக்கையை அரசு விரும்பவில்லை.
எனவேதான், தமிழகத்திலிருந்து வெளி மாநிலங்களுக்கான சேவைக்கு, தனியாரிடமிருந்து வாடகைக்கு பேருந்துகளை வாங்கி பயன்படுத்தலாம் என்ற கொள்கை முடிவை அரசு எடுத்தது.
இந்தப் பேருந்துகளின் ஓட்டுநர்கள் தனியாராக இருப்பார்கள். ஆனால் நடத்துநர்கள் விரைவுப் போக்குவரத்துக் கழகத்தைச் சேர்ந்தவர்களாக இருப்பார்கள்.
அரசுப் போக்குவரத்துக் கழகங்களை தனியார் மயமாக்கும் எண்ணம் அரசிடம் இல்லை. தனியார் பேருந்துகளை வாடகைக்கு எடுக்கும் திட்டம் தொடர்பாக சட்டசபையில் மசோதா தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்படும்.
அனைத்துத் தரப்பினருடன் கலந்து ஆேலாசித்த பின்னரே அது சட்டமாக்கப்படும் என்றார் நேரு.












Click it and Unblock the Notifications