குமாரசாமியால் முடிவது கருணாநிதியால் முடியாதா?: பாமக
சென்னை: முதல்வர் கருணாநிதியின் அனுபவத்தில் பாதியளவு கூட இல்லாத கர்நாடக முதல்வர் குமாரசாமியால் கர்நாடகத்தில் மது விலக்கை பூரணமாக அமல்படுத்த முடியும் போது தமிழகத்திலும் அதுபோல அமல்படுத்த முடியாதா என்று பாமக கேட்டுள்ளது.
சட்டசபையில் பட்ஜெட் மீதான விவதாத்தில் கலந்து கொண்டு பாமக உறுப்பினர் வேல்முருகன் பேசுகையில், பட்ஜெட்டில் மதுக் கடைகளுக்கு மூடு விழா குறித்த அறிவிப்பை எதிர்பார்த்தோம். ஆனால் அது இடம்பெறவில்லை.
மது விலக்கை தளர்த்துங்கள், வருமானம் பெருகும் என்று அண்ணாவிடம் அதிகாரிகள் சொல்லியபோது, ஏழைத் தாய்மார்களின் கண்ணீருக்குப் பின்னால்தான் அது வரும் என்று கூறி மறுத்து விட்டார். இதை நான் சொல்லி கருணாநிதிக்குத் தெரிய வேண்டியதில்லை.
ராஜாஜியும், பெரியாரும் கூட மது விலக்குக் கொள்கையில் உறுதியாக இருந்துள்ளனர். பெரியார் தனது வீட்டில் வளர்ந்த தென்னை மரங்களைக் கூட வெட்டியதாக வரலாறு உண்டு.
தமிழகத்தில் உணவுப் பொருள் கிடைக்கிறதோ இல்லையோ, மது வகைகள் தாராளமாக கிடைக்கின்றன. தங்கு தடையில்லாமல் குடிமக்கள் குடிக்கிறார்கள்.
முதல்வர் கருணாநிதியின் அனுபவத்தில் பாதியளவு கூட இல்லாத குமாரசாமி, கர்நாடகத்தில் பூரண மது விலக்கை அமல்படுத்துகிறார். அதில் உறுதியாக இருக்கப் போவதாகவும் சொல்கிறார். அவரால் முடிகிறபோது, நமது முதல்வரால் முடியாதா என்ன?
கோடிக்கணக்கான இளைஞர்கள் தவறான பாதைக்குச் செல்லக் காரணமான மது விற்பனையை அரசு முழுமையாக தடை செய்ய வேண்டும். பூரண மது விலக்கை அமல்படுத்த வேண்டும்.
அதேபோல லாட்டரிச் சீட்டு விற்பனை. தடை செய்யப்பட்ட போதும் கூட லாட்டரிச் சீட்டு விற்பனை அமோகமாக நடந்து கொண்டுதான் உள்ளது. இதை ஒரு சக்தி பின்னாலிருந்து இயக்குகிறது. அதைக் கண்டுபிடித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சிறுவணிகர்களின் வாழ்க்கையைப் பாதிக்கும் அளவுக்கு விஸ்வரூபம் எடுத்து வரும் ரிலையன்ஸ் உள்ளிட்ட பெரிய வர்த்தக நிறுவனங்கள், சில்லறை வணிகத்தில் ஈடுபடுவதைத்த தடுத்து நிறுத்த வேண்டும் என்றார் வேல்முருகன்.












Click it and Unblock the Notifications