டென்டுல்கர் ஒரு ஆளா? சு.சுவாமி
டெல்லி: இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் ராகுல் டிராவிடையும், பயிற்சியாளர் கிரேக் சேப்பலையும் நீக்க சில பத்திரிகைகளைத் தூண்டி வரும் செயலில் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் ஈடுபடுகிறது. அந்த செயலை வாரியம் நிறுத்தாவிட்டால் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப் போவதாக ஜனதாக் கட்சித் தலைவர் சுப்ரமணியம் சுவாமி கூறியுள்ளார்.
இதுகுறித்து சுவாமி வெளியிட்டுள்ள அறிக்கை:
இந்திய கிரிக்கெட் வாரியம் தற்போது ஒரு குரூரமான வேலையில் இறங்கியுள்ளது. அதாவது கேப்டன் டிராவிடையும், பயிற்சியாளர் சேப்பலையும் நீக்க குறுக்கு வழியை அது கடைப்பிடிக்க ஆரம்பித்துள்ளது.
சில பத்திரிக்கைகள் மற்றும் தொலைக்காட்சி சேனல்களைத் தூண்டி இருவர் மீதும் அதிருப்தி அதிகரித்து விட்டதாகவும், அவர்களை நீக்கியாக வேண்டும் என்றும் செய்தி வெளியாக தூண்டி வருகிறது. இதன் மூலம் இருவரையும் நீக்கி விட்டு சச்சின் டெண்டுல்கரை கேப்டனாக்க கிரிக்கெட் வாரியம் திட்டமிட்டுள்ளது.
வாரியத்தின் இந்த செயலுக்கு சில மீடியாக்கள் கட்டுப்பட்டு டிராவிட் குறித்தும், சேப்பல் குறித்தும் தவறாக செய்திகளை வெளியிட்டு வருகின்றன. ராஜீவ் சுக்லா போன்ற சிலரின் தனிப்பட்ட விருப்பத்தின் காரணமாக டெண்டுல்கரை கேப்டனாக்க முயற்சிகள் நடக்கிறது.
கேப்டன் பொறுப்பை சுமக்க முடியாமல் அந்தப் பதவியை விட்டு வெளியேறியவர் டெண்டுல்கர். அப்படிப்பட்டவரிடம் மீண்டும் கேப்டன் பொறுப்பைக் கொடுக்க வாரியம் துடிப்பது ஏன் என்று தெரியவில்லை.
டிராவிட் மிகச் சிறந்த வீரர். அணியில் எந்த வரிசையில் ஆடப் பணிக்கப்பட்டாலும் சிறப்பாக ஆடக் கூடியவர். நிலையான, தரமான வீரர் டிராவிட்.
நல்ல திறமையான வீரர்களின் மனம் ஒடியும் வகையில் செயல்படுவதை கிரிக்கெட் வாரியம் நிறுத்திக் கொள்ள வேண்டும். இல்லாவிட்டால் கோர்ட்டை அணுகுவதைத் தவிர எனக்கு வேறு வழியில்லை.
தனி நபர்களின் விருப்பத்திற்கேற்ப, அவர்களது பிசினஸ் வசதிக்கேற்ப வீரர்களைப் பந்தாடுவதை அனுமதிக்க முடியாது.
இந்த நிலை தொடர்ந்தால் கிரிக்கெட் வாரியத்தின் செயல்பாடு குறித்து விரிவாக விசாரணை நடத்தக் கோரி நான் நீதிமன்றத்தை நாடுவேன். கிரிக்கெட் வாரியத்தின் நிதி கையாளுகை குறித்தும், செலவுகள் குறித்தும் விசாரிக்க நான் கோர வேண்டி வரும் என்று கூறியுள்ளார் சுவாமி.












Click it and Unblock the Notifications