காவிரி: வேதம் ஓதும் வெங்கய்யா நாயுடு
சென்னை:காவிரிப் பிரச்சினையில், கர்நாடகத்திற்கான ஆதரவாக பிரதமர் மன்மோகன் சிங்கைப் பார்த்து மனு கொடுத்த பாஜக தலைவர் வெங்கய்யா நாயுடு இப்பிரச்சினையில் பாஜகவின் நிலைப்பாடு வேறு வேறாகத்தான் இருக்கும் என்று கூறியுள்ளார்.
சமீபத்தில் டெல்லியில் பிரதமர் மன்மோகன் சிங்கை கர்நாடக எம்.பிக்கள் குழு சந்தித்து, தீர்ப்பை அரசு கெஜட்டில் வெளியிடக் கூடாது என்று கோரி மனு கொடுத்தது. அந்தக் குழுவில் இடம் பெற்றிருந்தவர் வெங்கய்யா நாயுடு.
நாயுடு, கர்நாடக மாநிலத்திலிருந்து ராஜ்யசபாவுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டவர். காவிரிப் பிரச்சினையில் தமிழகத்திற்காக இதுவரை ஒரு போராட்டத்திலும் கலந்து கொள்ளாத வெங்கய்யா, கர்நாடகத்துக்காக குரல் கொடுக்கத் தவறாதவர்.
டெல்லியில் பிரதமரிடம் மனு கொடுத்த கர்நாடகக் குழுவில் தைரியமாக கலந்து கொண்ட வெங்கய்யா இன்று சென்னை வந்திருந்தார். அப்போது காவிரிப் பிரச்சினை தொடர்பாக பாஜகவின் கொள்கை மாநிலத்துக்கு மாநிலம் வித்தியாசமானதாக, வேறு மாதிரியாகத்தான் இருக்கும். இதில் தவறில்லை என்று தெரிவித்தார்.
வெங்கய்யா தொடர்ந்து பேசுகையில், கர்நாடக பாஜக, அந்த மாநிலத்துக்காகத்தான் குரல் கொடுக்கும். தமிழக பாஜக தமிழகத்துக்கு ஆதரவாக குரல் கொடுக்கும். மத்திய அரசுதான் இரு மாநில அரசுகளையும் அழைத்துப் பேச்சு நடத்தி சுமூக தீர்வு காண முயற்சிக்க வேண்டும்.
விடுதலைப்புலிகள் விவகாரத்தில் மத்திய அரசும், தமிழக அரசும் மிகவும் விழிப்புடன் இருக்க வேண்டும். விடுதலைப் புலிகள் தற்போது விமான பலத்தைப் பெற்றுள்ளனர். இது மிகவும் ஆபத்தானது.
இலங்கைப் பிரச்சினையில், கடந்த காலத்தில் ஏற்பட்ட அனுவபங்களைப் பாடமாகக் கொண்டு இந்தப் பிரச்சினையை அணுக வேண்டும்.
விடுதலைப் புலிகளுக்கு ஆதரவு தருவது என்பது வேறு, ஈழத் தமிழர்களை ஆதரிப்பது என்பது வேறு. இந்த வேறுபாட்டை நாம் முதலில் புரிந்து கொள்ள வேண்டும்.
இலங்கையில் நிலவும் தன்மை, தமிழகத்திலும் எதிரொலிக்கும். விடுதலைப் புலிகளை ஆதரிப்போரிடம் அரசு கடுமையாக நடந்து கொள்ள வேண்டும். கூடுதல் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என்றார் வெங்கய்யா.












Click it and Unblock the Notifications