புலிகளின் விமான தாக்குதல்: இந்தியா கவலை
டெல்லி:விடுதலைப் புலிகள் விமானத் தாக்குதலை மேற்கொண்டுள்ளது கவலை தரும் விஷயம் என்று இந்தியா தெரிவித்துள்ளது.
இதுகுறித்து டெல்லியில் செய்தியாளர்ளிடம் மத்திய வெளியுறவுத் துறை செயலாளர் சிவசங்கர் மேனன் பேசுகையில், இலங்கையில் வன்முறை அதிகரித்து வருவது கவலை தருகிறது.
மனிதாபிமான சீர்குலைவு அங்கு அதிகரித்து வருகிறது. இது இந்தியாவுக்கு கவலை அளிக்கிறது. வன்முறை சீக்கிரம் முடிவுக்கு வர வேண்டும் என்று மற்ற நாடுகளுடன் சேர்ந்து இந்தியாவும் குரல் கொடுக்கிறது. விரைவில் சண்டை முடிவுக்கு வந்து சமாதானம் ஏற்பட விரும்புகிறோம்.
இந்தியா இலங்கைக்கு அளித்த ரேடார்கள், விடுதலைப் புலிகளின் விமானங்களை கண்டுபிடிக்கத் தவறி விட்டதாக கூறுவதில் உண்மை இல்லை. இந்திய ரேடார்கள் சரியில்லை என்ற கூற்றையும் ஏற்க முடியாது. ஒரு சம்பவத்தை மட்டும் வைத்துக் கொண்டு மொத்தமாக சரியில்லை என்று கூறி விட முடியாது என்றார் மேனன்.
இலங்கக்கு ரேடார் உள்ளிட்ட கருவிகளை தரவில்லை என்று முதலில் மத்திய அரசு கூறியிருந்தது. ஆனால் தற்போது இந்திய ரேடார்கள் சரியில்லை என்று கூறுவதை ஏற்க முடியாது என மேனன் கூறியிருப்பதைப் பார்த்தால் இந்தியா ஏற்கனவே இலங்கைக்கு ரேடார்களை வழங்கியுள்ளது உறுதியாகிறது.
அதேசமயம், இந்தியா வழங்கிய ரேடார்கள் சரியில்லை என்று இலங்கை அதிகாரிகள் தற்போது அதிருப்தி தெரிவித்துள்ளதாக அங்குள்ள பத்திரிகைகளில் செய்திகள் வெளியாகியுள்ளன.












Click it and Unblock the Notifications