சட்டசபையில் அதிமுக, மதிமுக வெளிநடப்பு
சென்னை:அதிமுக ஆட்சியில் கரும்பு விலை தொடர்பான சர்ச்சைக்கு சபாநாயகர் ஆவுடையப்பன் அளித்த தீர்ப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து அதிமுக எம்.எல்.ஏக்களும், அவர்களுக்கு ஆதரவாக மதிமுகவினரும் இன்று வெளிநடப்புச் செய்தனர்.
சட்டசபையில் நேற்று வேளாண்துறை அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம் பேசுகையில், கடந்த 2001 முதல் 2005 வரையிலான அதிமுக ஆட்சியில் கரும்புக்கான குறைந்தபட்ச விலை நிர்ணயிக்கப்படவில்லை என்றார்.
இதற்கு அதிமுக எம்.எல்.ஏ.கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். பின்னர் இதுதொடர்பாக கோப்புகளைப் பார்த்து ஆய்வு செய்து தான் தீர்ப்பளிப்பதாக சபாநாயகர் ஆவுடையப்பன் தெரிவித்தார்.
அதன்படி இன்று காலை சபை கூடியதும் இதுதொடர்பான தீர்ப்பை சபாநாயகர் அறிவித்தார். அப்போது அவர் கூறுகையில், கடந்த அதிமுக ஆட்சியில், 2001ம் ஆண்டு ஜனவரி 19ம் தேதி நடந்த அமைச்சரவைக் கூட்டத்தில் கரும்புக்கு விலை நிர்ணயம் செய்வதில்லை என முடிவெடுக்கப்பட்டதாக கோப்புகள் கூறுவதாக தெரிவித்தார்.
இதற்கு அதிமுக உறுப்பினர்கள் கடும் ஆட்சேபனை தெரிவித்து எழுந்து நின்று கோஷமிட்டனர். அவர்களை சபாநாயகர் இருக்கையில்அமருமாறு கூறினார். ஆனால் அதிமுகவினர் தொடர்ந்து கோஷமிட்டபடி இருந்தனர். பின்னர் அதிமுக உறுப்பினர்கள் வெளிநடப்புச் செய்தனர்.
அதிமுகவுக்கு ஆதரவு தெரிவித்து மதிமுக உறுப்பினர்களும் வெளிநடப்புச் செய்தனர். பின்னர் சிறிது நேரம் கழித்து இரு கட்சிகளின் உறுப்பினர்களும் சபைக்குத் திரும்பினர்.












Click it and Unblock the Notifications