கருணாநிதிக்கு பொன்விழா தேவையா? ஜெ.
சென்னை:நாடு இருக்கும் நிலையில் முதல்வர் கருணாநிதிக்கு பொன்விழா எடுப்பது தேவையான ஒன்றுதானா என்று அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா கேட்டுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:
தமிழக சட்டசபையில், வருகிற 10, 11 ஆகிய இரு நாட்களில் சட்டமன்றத்தில் கலைஞர்- பொன்விழா என்ற விழாவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டு, சட்டசபைக் கூட்டத் தொடர் 2 நாட்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.
இதற்கான விழாக்குழு அமைக்கவும் ஏற்பாடாகி, அதிமுக சார்பில் அக்குழுவில் யாரை நியமிக்கிறீர்கள் என்று கேட்கும் அளவுக்கு துணிச்சல் வந்துள்ளது.
என்னை அசிங்கமான வார்த்தைகளால், இழிவான வார்த்தைகளால் அசிங்கப்படுத்திய கருணாநிதிக்கு பொன்விழா என்பதும், அதற்கான குழுவில் அதிமுக இடம்பெற வேண்டும் என்று கேட்டால் எப்படி இசைவு அளிப்பார்கள்?
நாடு இன்று இருக்கிற நிலையில் இது தேவைதானா என்பதை மக்கள் எண்ணிப் பார்க்க வேண்டும்.
50 ஆண்டுகள் முடிந்த பின்னர் கொண்டாடப்படுவதுதான் பொன்விழா. ஆனால் கருணாநிதி 50 ஆண்டுகளை சட்டசபையில் நிறைவு செய்யவில்லை என்பதுதான் உண்மை. அதிமுக கணக்குப்படி அவர் 38 ஆண்டுகள்தான் சட்டசபையில் கழித்துள்ளார்.
2001 முதல் 2006 வரை அவர் சட்டசபைக்கே வரவில்லை. பதவி நீக்கத்திலிருந்து தப்பிக்க சட்டசபை வராண்டாவிலும், எதிர்க்கட்சித் தலைவரின் அறைக்கு வருகைப் பதிவேட்டை வரவழைத்தும் கையெழுத்துப் போட்டு தனது பதவியை தக்க வைத்துக் கொண்டார்.
எம்.ஜி.ஆர். முதல்வராக இருந்தபோது பல நாட்களுக்கு கருணாநிதி சட்டசபைக்கு வந்ததே இல்லை.
50 ஆண்டுகளை முடித்ததற்காக கருணாநிதிக்குப் பொன் விழா என்றால் பேராசிரியர் அன்பழகனுக்கும் அதேபோல பொன்விழா கொண்டாடப்படுவதுதான் நியாயம்.
இந்த விழாவில் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் கலந்து கொண்டு சட்டசபையில் உரையாற்றப் போவதாக கூறப்பட்டுள்ளது. தமிழகம் இருண்டு போயுள்ள இந்த நிலையில், குடியரசுத் தலைவர் இந்த விழாவுக்கு வந்து உரையாற்றக் கூடாது என்று அதிமுக சார்பில் கேட்டுக் கொள்கிறேன் என்று கூறியுள்ளார் ஜெயலலிதா.












Click it and Unblock the Notifications