வாகனங்களைக் கொளுத்திய மர்ம நபர் கைது
சென்னை:சென்னை நகரில் வீட்டுக்கு வெளியே நிறுத்தப்பட்ட வாகனங்களைக் குறி வைத்து தீவைத்துக் கொளுத்திய மர்ம ஆசாமி போலீஸ் பிடியில் சிக்கியுள்ளதாக தெரிகிறது.
சென்னை கே.கே.நகர், கோடம்பாக்கம், அசோக் நகர், வளசரவாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் கடந்த சில வாரங்களாக வீட்டுக்கு வெளியே நிறுத்தப்பட்ட வாகனங்கள் மர்மமான முறையில் தீவைத்துக் கொளுத்தப்பட்டன.
சில வாரங்களில் மட்டும் நூற்றுக்கும் மேற்பட்ட வாகனங்கள் இதுபோல தீயில் எரிந்து நாசமாயின. யாரோ சிலர்தான் இதுபோன்ற விஷமத்தனத்தில் ஈடுபடுவதாக போலீஸார் நினைத்தனர். அந்த மர்ம நபர்களைப் பிடிக்க போலீஸார் வலை விரித்தனர்.
10க்கும் மேற்பட்ட தனிப்படைகள் அமைத்து போலீஸார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். இந்த நிலையில், வடபழனியில் சந்தேகத்திற்கிடமான வகையில் ஒரு நபர் போலீஸ் பிடியில் சிக்கினார். அவரிடம் விசாரணை நடத்தியபோது, அவர்தான் வாகனங்களை தீ வைத்து எறித்த நபர் எனத் தெரிய வந்தது.
இதுக்குறித்து போலீஸார் கூறுகையில், பார்ப்பதற்கு மனநோயாளி போல அந்த நபர் இருக்கிறார். அவரிடம் தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது. விரைவில் முழு விவரமும் தெரிய வரும் என்றனர்.












Click it and Unblock the Notifications