ராணுவ வீரரை அவமதித்த வழக்கில் 1 மாதம் சிறை:கைதாகிறார் சங்கரராமன் புகழ் பிரேம்குமார்
மதுரை:முன்னாள் ராணுவ வீரருக்கு கை விலங்கிட்டு தெருவில் ஊர்வலமாக இழுத்துச் சென்ற வழக்கில் எஸ்.பி. பிரேம்குமாருக்கு மதுரை உயர்நீதிமன்றக் கிளை 1 மாதம் சிறைத் தண்டனை விதித்துள்ளது. இதையடுத்து பிரேம்குமாரை கைது செய்ய போலீஸார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
மதுரை மாவட்டம் வாடிப்பட்டியைச் சேர்ந்தவர் நல்லகாமன் (74). ஓய்வு பெற்ற ராணுவ வீரரான இவர் கடந்த 1976ம் ஆண்டு வாடிப்பட்டியைச் சேர்ந்த காவலர் பைரவ் சிங் என்பவரது வீட்டில் ஒத்திக்கு குடியிருந்து வந்தார்.
தனக்கு வீடு தேவைப்படுவதால் காலி செய்யும்படி கூறியுள்ளார் பைரவ் சிங். ஆனால் கொடுத்த ஒத்திப் பணத்தைத் திருப்பிக் கொடுத்தால் காலி செய்வதாக நல்லகாமன் கூறியுள்ளார். ஆனால் பணத்தைத் திருப்பிக் கொடுக்க பைரவ் சிங் மறுத்துள்ளார்.
![]() |
இதையடுத்து நல்லகாமன் மீது வாடிப்பட்டி போலீஸில் பைரவ் சிங் புகார் கொடுத்தார். அப்போது அந்தக் காவல் நிலையத்தில் சப் இன்ஸ்பெக்டராக இருந்தவர் பிரேம்குமார். நல்லகாமனை காவல் நிலையத்துக்கு விசாரணைக்கு வரச் சொன்னார் பிரேம்குமார். அப்போது நல்லகாமனையும், அவரது மகனையும் கைவிலங்கிட்டு தாறுமாறாக தாக்கியுள்ளார்.
பின்னர் அவர்கள் இருவரது உடலிலும் சங்கிலியால் பிணைத்து வாடிப்பட்டி பஸ் நிலையம் வரை ஊர்வலமாக இழுத்துச் சென்று அவமானப்படுத்தியுள்ளார்.
அத்தோடு நிற்காமல் நல்லகாமன் மற்றும் அவரது மகன் மீது கொலை முயற்சி உள்ளிட்ட வழக்குகளையும் பதிவு செய்தார் பிரேம்குமார். அவரின் இந்த அராஜக நடவடிக்கையைக் கண்டித்து வாடிப்பட்டியில் பொதுமக்கள் போராட்டத்தில் குதித்தனர். இதையடுத்து உசிலம்பட்டி உதவி ஆட்சியர் விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது.
அதன் அடிப்படையில், பிரேம்குமார், காவலர்கள் சுப்ரமணியன், செல்லையா, ராதாகிருஷ்ணன் ஆகியோர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
இந்த வழக்கை விசாரித்த கீழ் நீதிமன்றம் பிரேம்குமார் குற்றவாளி என தீர்ப்பளித்தது. அதேசமயம், நன்னடத்தையைக் கடைப்பிடிக்குமாறு கூறி பிரேம்குமார் உள்ளிட்டவர்களுக்கு அறிவுரை வழங்கி தண்டனை எதுவும் விதிக்கப்படவில்லை.
இந்த நிலையில் பிரேம்குமார் தன்னைக் குற்றவாளி என கீழ் நீதிமன்றம் அளித்த தீர்ப்பை ரத்து செய்யக் கோரி உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அதேபோல, பிரேம்குமார் தொடர்ந்த பொய் வழக்கில் குற்றவாளி என தீர்ப்பளிக்கப்பட்ட நல்லகாமனும் அப்பீல் செய்தார்.
இந்த மனுக்கள் நேற்று நீதிபதி செல்வம் முன்னிலையில் விசாரணைக்கு வந்தன. அப்போது நீதிபதி தனது தீர்ப்பில் தெரிவிக்கையில், பிரேம்குமார், ராதாகிருஷ்ணன், சுப்ரமணியன், செல்லையா ஆகியோர் எல்லை மீறி நடந்து கொண்டுள்ளனர்.
![]() |
பொது ஊழியர்களாக இருப்பவர்கள் பொதுமக்களுக்கு முன்மாதிரியாக இருக்க வேண்டும். ஆனால் பிரேம்குமார் உள்ளிட்ட நான்கு பேரும் அப்படி நடந்து கொள்ளவில்லை.
நல்லகாமனை காவல் நிலையத்திலிருந்து பஸ் நிலையம் வரை கைவிலங்கிட்டும், சங்கிலியில் பிணைத்தும் ஊர்வலமாக அழைத்துச் சென்றுள்ளனர். எனவே அவர்களுக்கு கடும் தண்டனை வழங்க வேண்டியது அவசியம்.
அவர்கள் செய்துள்ள குற்றத்தின் தன்மையைக் கருதி நான்கு பேருக்கும் தலா 1 மாதம் சிறைத் தண்டனை அளிக்கப்படுகிறது. சம்பந்தப்பட்ட கீழ் நீதிமன்றமே அவர்களை சிறையில் அடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறினார்.
இதையடுத்து பிரேம்குமார் உள்ளிட்ட நான்கு பேரையும் கைது செய்ய போலீஸ் தரப்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
குற்றவாளி என தீர்ப்பளிக்கப்பட்டுள்ள பிரேம்குமார் கடந்த அதிமுக ஆட்சியாளர்களின் முழு ஆதரவையும், அரவணைப்பையும் பெற்று சர்வ அதிகாரம் படைத்தவராக விளங்கினார்.
கடலூர் மாவட்ட எஸ்.பியாக இருந்த அவர், பாமக எம்.எல்.ஏ வேல்முருகனை கொலை வழக்கில் உள்ளே தள்ள மிகக் கடுமையாகப் போராடினார். இவரது தீவிரம் காரணமாக ஆட்சி அகலும் வரை வேல்முருகன் தலைமறைவாகவே இருக்க நேரிட்டது நினைவிருக்கலாம்.
பின்னர் காஞ்சிபுரம் எஸ்.பியாக மாற்றப்பட்ட பிரேம்குமார், சங்கரராமன் கொலை வழக்கை அதிக ஆர்வம் எடுத்துக் கொண்டு விசாரித்தார். பின்னர் சிபிசிஐடிக்கு மாற்றப்பட்ட அவர், சங்கரராமன் வழக்கை சரியாக விசாரிக்கவில்லை என்று கூறி சஸ்பெண்ட் செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
உச்சநீதிமன்றத்தை அனுகுவேன்: நல்லகாமன்
இதற்கிடையில் பிரேம்குமாருக்கு வழங்கப்பட்ட தீர்ப்பு குறித்து நல்லகாமன் கூறுகையில்,
நான் 12 பேர் மீது வழக்கு தொடர்ந்து இருந்தேன். அதில் ஒருவர் இறந்து விட்டதால் 11 மீது வழக்கு விசாரணை நடந்து வந்தது.
இந்நிலையில் இந்த வழக்கில் 4 பேருக்கு மட்டும் தண்டனை வழங்கி மதுரை உயர்நீதிமன்ற கிளை தீர்ப்பு வழங்கியுள்ளது. இந்த தீர்ப்பில் எனக்கு திருப்தி இல்லை எனவே இந்த தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்வேன் என்றார்.














Click it and Unblock the Notifications