மானிய விலையில் பாமாயில் தருவீங்களா? ஜெ.
சென்னை:ரேஷன் கடைகளில் வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ள பாமாயில், துவரம் பருப்பு, உளுத்தம் பருப்பு, ரவை, மைதா ஆகியவை மானிய விலையில் தரப்படுமா அல்லது வெளிச் சந்தை விலையில் தரப்படுமா என்பதை முதல்வர் கருணாநிதி விளக்க வேண்டும் என அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா கேட்டுள்ளார்.
இதுதொடர்பாக ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கையில்,
ரேஷன் கடைகளில் அரிசி, சர்க்கரை, மண்ணெண்ணையுடன், இனிமேல் பாமாயில், துவரம் பருப்பு, உளுத்தம் பருப்பு, ரவை, மைதா ஆகியவையும் விநியோகிக்கப்படும் என முதல்வர் கருணாநிதி அறிவித்துள்ளார்.
இவை மானிய விலையில் விற்கப்படுமா அல்லது வெளிச் சந்தை விலையில் வழங்கப்படுமா என்பதை அரசு விளக்கவில்லை. வெளிச்சந்தை விலையில்தான் இப்பொருட்கள் வழங்கப்படும் என்றால் அதனால் நுகர்வோருக்கு என்ன பயன்?
இப்போது விலை உயர்வுதான் பிரச்சினையே தவிர, பொருட்களுக்கு தட்டுப்பாடு எதுவும் இல்லை. இனிமேல், இப்பொருட்களை வாங்கினால்தான் அரிசி, மண்ணெண்ணை, சர்க்கரை ஆகியவை விநியோகிக்கப்படும் என நுகர்வோர்கள் கட்டாயப்படுத்தப்படும் நிலை உருவாகும்.
மானிய விலையில் பொருட்களை வழங்கினால்தான் மக்களுக்குப் பலன் கிடைக்கும். ஆனால் கருணாநிதி அப்படி அறிவிக்கவில்லை.
எனவே பாமாயில், பருப்பு, ரவை, மைதா ஆகியவற்றை ரேஷன் கடையில் விநியோகம் செய்யப் போவதாக கருணாநிதி கூறியிருப்பது வெறும் கண் துடைப்பாகும். இதுவும் திமுக அரசின் இன்னொரு மோசடித் திட்டமாகும் என்று கூறியுள்ளார் ஜெயலலிதா.