மும்பையில் சேப்பல் கொடும்பாவி எரிப்பு
மும்பை:சச்சின் டெண்டுல்கர் குறித்து கருத்து தெரிவித்தற்காக பதவி விலகியுள்ள இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர் கிரேக் சேப்பலின் கொடும்பாவி மும்பையில் எரிக்கப்பட்டது.
வட மேற்கு மும்பையில் உள்ள விலி பார்லே என்ற இடத்தில் இந்திய கிரிக்கெட் வாரியத் தலைவர் சரத்பவாரின் தேசியவாத காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த தொண்டர்கள் கூடினர்.
சச்சின் குறித்து காட்டமாக கருத்து தெரிவித்துள்ள சேப்பலைக் கண்டித்து கோஷமிட்ட அவர்கள் பின்னர் சேப்பலின் கொடும்பாவியையும் தீவைத்துக் கொளுத்தினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. போலீஸார் தலையிட்டு அவர்களைக் கலைந்து போகச் செய்தனர்.
சேப்பலுடன் மோதல் இல்லை: சச்சின்
இதற்கிடையே, சேப்பலுக்கும், தனக்கும் இடையே தனிப்பட்ட ரீதியில் எந்த மோதலும் இல்லை என்று சச்சின் கூறியுள்ளார்.
சேப்பல் ராஜினாமா செய்தது குறித்து சச்சின் கருத்து தெரிவிக்கையில், எனக்கும் அவருக்கும் எந்தவிதமான மோதலும் இல்லை. எனக்கு யாருடனும் சண்டை போடும் பழக்கமும் இல்லை.
எனது பதிலில், எனது அர்ப்பணிப்புத் தன்மை குறித்து சேப்பல் அப்படி கூறியிருந்தால் மிகுந்த வேதனை தரும் விஷயம் என்றுதான் கூறியிருந்தேன்.
சீனியர் வீரர்கள் எப்போதும் ஜூனியர் வீரர்களை ஊக்கப்படுத்துகிறார்கள். இதைப்பற்றி அவர்களிடம் கேட்டாலே தெரியும். நான் எப்போதும் இளம் வீரர்களிடம் சகஜமாக பேசுவேன். நாங்கள் ஒற்றுமையாக தான் இருக்கிறோம். எந்த கருத்து வேறுபாடும் கிடையாது என்றார் சச்சின்.












Click it and Unblock the Notifications