விடுதலைப் புலிகள் ஊடுறுவல் இல்லை - ஐ.ஜி
திருச்சி:தமிழகத்தில் விடுதலைப் புலிகளின் ஊடுறுவல் இல்லை என்று மத்திய மண்டல போலீஸ் ஐஜி ஜாபர் சேட் கூறியுள்ளார்.
திருச்சியில் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில்,
சமீபத்தில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இரும்புக் குண்டுகள், வெடிபொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இதையடுத்து தமிழகம் முழுவதும் போலீஸ் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
மத்திய மண்டலத்திலும் தீவிரக் கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது. குறிப்பாக விமான நிலையத்தில் அதி தீவிர கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது. திருச்சி விமான நிலையத்திற்கு வரும் பயணிகள் தீவிரமாக நோட்டமிடப்படுகிறார்கள்.
மத்திய மண்டலத்திற்குட்பட்ட பகுதிகளில் 3 அடுக்கு கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது. கடலோர மாவட்டங்களில் தலா 14 காவலர்களைக் கொண்ட சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன, கிராம தொண்டர் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன, இலங்கை தமிழர்கள் குறித்த கணக்கெடுப்பும், பரிசோதனைகளும் அவ்வப்போது மேற்கொள்ளப்படுகின்றன.
மத்திய மண்டலத்திற்குட்பட்ட தஞ்சை, நாகை, திருவாரூர் ஆகிய மாவட்டங்களில் கூடுதல் கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
மத்திய மண்டலத்தில் மொத்தம் எட்டு அகதிகள் முகாம்கள் உள்ளன. இங்கு 2516 குடும்பங்களைச் சேர்ந்த 9016 அகதிகள் தங்கியுள்ளனர். இவை தவிர மத்திய மண்டலத்திற்குட்பட்ட பகுதிகளில் 999 குடும்பங்களைச் சேர்ந்த 3170 இலங்கைத் தமிழர்கள் வசிக்கிறார்கள்.
மத்திய மண்டலப் பகுதியில் விடுதலைப் புலிகள் அறவே இல்லை என்றார் சேட்.












Click it and Unblock the Notifications