விளம்பரத்துக்கு ஆப்பு: மூத்த வீரர்கள் டென்ஷன்
மும்பை:விளம்பரப் படங்களில் நடிக்க கிரிக்கெட் வாரியம் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளால் கேப்டன் ராகுல் டிராவிட் உள்ளிட்ட மூத்த வீரர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.
உலகக் கோப்பைக் கிரிக்கெட் போட்டியில் கேவலமாக விளையாடி நாடு திரும்பியுள்ள இந்திய அணியை சீர் செய்ய பல்வேறு நடவடிக்கைகளை வாரியம் அறிவித்துள்ளது.
அதில் முக்கியமானது, விளம்பரப் படங்களில் நடிக்க விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகள். அதன்படி ஒரு வீரர் ஒரு போட்டித் தொடருக்கு 3 நிறுவனங்களுக்கு மட்டும் நடிக்கலாம். போட்டிக்கு 15 நாட்களுக்கு முன்பே விளம்பரப் படங்களில் நடித்து முடித்து விட வேண்டும் என்று வாரியம் கட்டுப்பாடு விதித்துள்ளது.
மேலும் விளம்பரப் படங்களில் நடிப்பதற்கும், விளம்பரங்களில் ஒப்பந்தமாவதற்கும் கிரிக்கெட் வாரியத்தின் முன் அனுமதியையும் வீரர்கள் பெற வேண்டும் என்றும் வாரியம் அறிவித்துள்ளது.
இதனால் சகட்டு மேனிக்கு விளம்பரப் படங்களில் நடித்து வரும் மூத்த வீரர்கள் பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். குறிப்பாக சச்சின் டெண்டுல்கருக்கு கிட்டத்தட்ட ஆண்டுக்கு ரூ. 15 கோடி அளவுக்கு நஷ்டம் ஏற்படும் எனக் கூறப்படுகிறது.
இந்திய விளையாட்டு வீரர்களிலேயே விளம்பரம் மூலம் அதிக பணம் சம்பாதிப்பவர் சச்சின் டெண்டுல்கர்தான். விளம்பரங்கள் மூலம் மட்டும் இவர் ஆண்டுக்கு ரூ. 45 கோடி வரை சம்பாதிப்பதாக கூறப்படுகிறது.
இவருக்கு அடுத்து கேப்டன் டிராவிட், ஷேவாக், யுவராஜ் சிங், டோணி, இர்பான் பதான் ஆகியோரும் கணிசமாக சம்பாதிக்கிறார்கள்.
கிரிக்கெட் வாரியத்தின் கட்டுப்பாடுகளால் சச்சினுக்கு ஆண்டுக்கு ரூ. 15 கோடி வரை விளம்பர வருவாய் இழப்பு ஏற்படும் எனக் கூறப்படுகிறது.
இதனால் டிராவிட், சச்சின் உள்ளிட்ட மூத்த வீரர்கள் கடும் அதிருப்தி அடைந்துள்ளனர். இந்தக் கட்டுப்பாடுகளை நீக்கக் கோரி கேப்டன் டிராவிட், வாரிய நிர்வாகத்திடம் பேசத் திட்டமிட்டுள்ளார்.
ஆனால் வீரர்கள் விளம்பரக் கட்டுப்பாடு குறித்து கவலைப்படுவதை விட்டு விட்டு விளையாட்டில்தான் தீவிர கவனம் செலுத்த வேண்டும் என கிரிக்கெட் வாரிய பொதுச் செயலாளர் நிரஞ்சன் ஷா காட்டமாக கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications