வெறி கொண்ட யானை-பாகன் பலிஉடலுடன் தெருக்களில் ஓடியதால் பரபரப்பு
திருச்சூர்:கேரள மாநிலம் திருச்சூர் மாவட்டம் சேத்துவா என்ற இடத்தில் கோவில் திருவிழாவுக்காக வந்த யானைக்கு மதம் பிடித்து, பாகனை அடித்துக் கொன்றது. பின்னர் பாகனின் உடலை தூக்கிக் கொண்டு தெருக்களில் ஓடியதால் மக்கள் பீதியடைந்து ஓட்டம் பிடித்தனர்.
சேத்துவாவில் நடைபெற்ற கோவில் திருவிழாவில் யானைகள் ஊர்வலம் நடத்தப்பட்டது. இதில் ஏராளமான யானைகள் கலந்து கொண்டன. அதில் ஒன்று, பூங்குன்னம் பகுதியைச் சேர்ந்த வினயன் என்கிற யானை. இதன் பாகன் உன்னி (50).
![]() |
பட்டம் கட்டி அலங்காரம் செய்து யானை வினயன் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. அப்போது திடீரென யானைக்கு மதம் பிடித்தது. இதையடுத்து தன்னைக் கட்டியிருந்த சங்கிலியை அறுத்துக் கொண்டு ஆவேசமாக கிளம்பியது.
இதைப் பார்த்த கோவிலுக்கு வந்திருந்த பக்தர்களும், பொதுமக்களும் அலறி அடித்து ஓடினர். வினயனைக் கட்டுப்படுத்த உன்னி முயன்றார். ஆனால் கொந்தளித்துக் கிடந்த யானை, உன்னியை அப்படியே தூக்கிப் போட்டு தனது தந்தத்தால் வெறி கொண்டு தாக்கியது. இதில் நிலை குலைந்த உன்னி சம்பவ இடத்திலேயே இறந்தார்.
அப்படியும் கோபம் குறையாத வினயன், உன்னியை தனது தந்தத்தால் குத்தித் தூக்கியபடி அங்கிருந்து ஓடத் தொடங்கியது. தெருக்கள் வழியாக உன்னியின் உடலுடன் யானை ஓடி வந்ததைதப் பார்த்து தெருக்களில் சென்ற மக்கள் பீதியில் அலறியபடி பாதுகாப்பான இடங்களுக்கு ஓடினர்.
அவர்களில் சிலரையும் யானை தாக்கியது. இதில் 18 பேருக்கு காயம் ஏற்பட்டது. அத்தோடு நில்லாமல் கோவில் திருவிழாவுக்கு வந்திருந்த இரு யானைகளையும் வினயன் தாக்கியது. இதில் அந்த யானைகளும் காயமடைந்தன.
தகவல் அறிந்து கால்நடை மருத்துவர்கள், வனத்துறையினர், போலீஸார் விரைந்து வந்தனர். துப்பாக்கி மூலம் மயக்க ஊசி போடப்பட்டது. இதையடுத்து வினயன் வீரியம் குறைந்து மயக்கமடைந்து விழுந்தது.
அதன் பின்னர் யானையை பாதுகாப்பான இடத்திற்குக் கொண்டு சென்று இரும்புச் சங்கிலி போட்டு அதைக் கட்டினர். அதன் பிறகு விழித்தெழுந்த யானை இயல்பு நிலைக்குத் திரும்பியது.













Click it and Unblock the Notifications