வெடிவிபத்து-ஒரு நபர் விசாரணை கமிஷன் அமைப்பு
சென்னை:விழுப்புரம் அருகே செண்டூரில் நடந்த வெடிவிபத்து குறித்து விசாரிக்க மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரியும், வருவாய் நிர்வாகத் துறை ஆணையருமான எம்.எஃப் பரூக்கி தலைமையிலான ஒரு நபர் கமிஷனை தமிழக அரசு நியமித்துள்ளது.
மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரி தலைமையிலான விசாரணைக் கமிஷன் அமைக்கப்படும் என ஏற்கனவே முதல்வர் கருணாநிதி நேற்று காலை சட்டசபையில் தெரிவித்திருந்தார்.
இதன் தொடர்ச்சியாக வருவாய் நிர்வாக ஆணையர் பரூக்கி இந்த விசாரணையை மேற்கொள்வார் என தமிழக அரசு நேற்று மாலை அறிவித்தது.
பரூக்கி தனது விசாரணையை ஒரு மாதத்திற்குள் முடித்து அறிக்கையை அரசிடம் வழங்குவார்.
வெடிபொருள் விற்பனை, சேமிப்பு, எடுத்துச் செல்வது, பயன்பாடு உள்ளிட்டவற்றில் நிலவும் குறைபாடுகளை இந்த கமிஷன் தீவிரமாக ஆராயும்.
இதுபோன்ற விபத்துக்களைத் தடுக்க எதிர்காலத்தில் எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் இக்குழு அரசுக்குப் பரிந்துரைக்கும்.
மேலும் செண்டூர் விபத்தில் இறந்த, படுகாயமடைந்தவர்களின் குடும்பங்களுக்கு வழங்கப்பட வேண்டிய இழப்பீடு மற்றும் அவர்களது மறுவாழ்வுக்கான வழிமுறைகளையும் இந்தக் கமிஷன் பரிந்துரைக்கும் என்று அரசு செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே வெடிவிபத்தினால் முழுமையாக அல்லது பாதியளவு சேதமைடந்த வீடுகளை சீரமைக்க ரூ. 25 லட்சம் நிதியை ஒதுக்கி முதல்வர் கருணாநிதி உத்தரவிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications