பைக் வரதட்சனை-இளம்பெண் எரித்து கொலை
திருவள்ளூர்:வரதட்சனை கேட்டு இளம்பெண்ணை உயிருடன் எரித்து கொலை செய்யப்பட்டார்.
திருவள்ளூர் மாவட்டம் சூரப்பூண்டி கிரமாத்தைச் சேர்ந்தவர் வனிதா (24). இவருக்கும் பெரியபாளையத்தை சேர்ந்த வேல்முருகன் என்ற வேலனுக்கும் கடந்த 2005ம் ஆண்டு திருமணம் நடந்தது.
திருமணத்தின் போது வனிதாவுக்கு அவரது பெற்றோர் 20 பவுன் நகை வரதட்சணையாக கொடுத்தனர். திருமணம் முடிந்த 3 மாதம் கழித்து வனிதாவை வேல்முருகனும் அவரது தாயார் சுந்தரம்மாளும் வரதட்சணை கேட்டு சித்தரவதை செய்ய ஆரம்பித்தனர்.
இதனால் வனிதா தனது தந்தை சுப்பிரமணியிடம் கேட்டு ஒரு டிவி மற்றும் மிக்சி ஆகியவற்றை வாங்கிக் கொண்டு வந்து கொடுத்தார்.
இதையடுத்து ஒரு மோட்டார் சைக்கிள் வாங்கி வருமாறு வனிதாவை மேலும் துன்புறுத்தினர். வனிதாவும் தனது தந்தையிடம் மோட்டார் சைக்கிள் வாங்கி தருமாறு கூறியுள்ளார். அதற்கு அவரது தந்தை இன்னும் இரண்டு மாதத்தில் அறுவடை முடிந்தவுடன் வாங்கி தருவதாக கூறினார்.
இதை ஏற்க மறுத்த வேல்முருகனும், சுந்தரம்மாளும் இப்போதே மோட்டார் சைக்கிள் வேண்டும். உனது தந்தையை யாரிடமாவது கடன் வாங்கி தரச்சொல் என கூறியுள்ளார்.
இந்நிலையில் நேற்று காலை இதுதொடர்பாக அவர்களிடையே வாக்குவாதம் முற்றியது. இதில் ஆத்திரம் அடைந்த வேல்முருகனும், சுந்தரம்மாளும் வனிதா மீது மண்ணென்னையை ஊற்றி தீ வைத்தனர்.
இதில் வனிதாவின் உடல் முழுவதும் தீ பற்றி எரிந்தது. அவர் வலியால் கதறியபடியே வெளியே ஓடிவந்தார். இவரது கதறலை கேட்ட அக்கம் பக்கத்தினர் ஓடிவந்து தீயை அணைத்து சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.
ஆனால் சிகிச்சை பலனின்றி வனிதா பரிதாபமாக உயிரிழந்தார்.
இதுகுறித்து வனிதாவின் தந்தை ஆரணி காவல் நிலையத்தில் வரதட்சணை கொடுமை படுத்தி தனது மகளை வேல்முருகனும், சுந்தரம்மாளும் எரித்து கொன்று விட்டதாக புகார் கொடுத்தார்.
இந்த புகாரின் அடிப்படையில் வேல்முருகனையும், சுந்தரம்மாளையும் போலீசார் கைது செய்தனர். இது தொடர்பாக ஆர்டிஓ விசாரணைக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது.