தேவைப்பட்டால் உச்ச நீதிமன்றம் செல்வோம்-காவிரி அனைத்துக் கட்சி கூட்டத்தில் முடிவு
சென்னை:காவிரி இறுதித் தீர்ப்பில் பாதகமான அம்சங்களை நீக்கக் கோரி முதலில் நடுவர் மன்றத்தில் மறு ஆய்வு மனு தாக்கல் செய்வது என்றும், தேவைப்பட்டால் உச்ச நீதிமன்றத்திலும் முறையிடுவது என்றும் இன்று நடந்த தமிழக அனைத்தக் கட்சிக் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது.
காவிரி நடுவர் மன்றத்தில் தமிழக அரசு மறு ஆய்வு மனு தாக்கல் செய்வது குறித்து அனைத்துக் கட்சி தலைவர்களுடன் முதல்வர் கருணாநிதி ஆலோசனை நடத்தினார்.
காவிரி நதி நீர் பங்கீடு குறித்து காவிரி நடுவர் மன்றம் தனது இறுதி தீர்ப்புப்பை கடந்த பிப்ரவரி மாதம் 5ம் தேதி வெளியிட்டது.
இந்த தீர்ப்பு அதிருப்தி அளிப்பதாகவும், அதை எதிர்த்து வழக்கு தொடரப் போவதாகவும் கர்நாடக அரசு அறிவித்தது.
காவிரி நடுவர் மன்ற தீர்ப்புக்கு தமிழக அரசும் அதிருப்தி தெரிவித்தது. அத்துடன் நடுவர் மன்ற தீர்ப்பில் உள்ள பாதகமான அம்சங்களை நீக்க வேண்டும் என்றும் பெரும்பான்மையான அரசியல் கட்சிகள் கோரிக்கை வைத்தன.
இந்நிலையில் கடந்த பிப்ரவரி 19ம் தேதி கருணாநிதி தலைமையில் அனைத்து கட்சி கூட்டத்தில் காவரி நடுவர் மன்றத்தின் இறுதி தீர்ப்பில் தமிழகத்துக்கு பாதகமாக இருக்கும் அம்சங்கள நீக்குவதற்காகவும், சில விளக்கங்களை பெறுவதற்காகவும் நடுவர் மன்றத்தில் மனு தாக்கல் செய்வது என்றும் தீர்மானிக்கப்பட்டது.
அந்த தீர்மான அடிப்படையில் சட்ட நிபுணர்களுடனனும், பொறியியல் வல்லுனர்களுடனும் கலந்து ஆலோசனை செய்து விளக்கம் மற்றும் வழிகாட்டு நெறிமுறைகள் குறித்து நடுவர் மன்றத்திடம் மறு ஆய்வு முறையிட வேண்டிய அம்சங்கள் பற்றிய ஒரு வரைவினை (டிராப்ட்) தமிழக அரசு தயார் செய்தது.
அந்த வரைவின் மீது தமிழகத்தில் உள்ள அனைத்து கட்சிகளின் தலைவர்களும் தங்கள் கருத்துக்களை தெரிவிக்கும் வகையில் அனைத்து கட்சி கூட்டம் இன்று நடந்தது.
இக் கூட்டத்தில் காங்கிரஸ், அதிமுக, பாமக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு, இந்திய கம்யூனிஸ்டு, பாரதீய ஜனதா, மதிமுக, தேமுதிக, விடுதலை சிறுத்தைகள், போட்டி மதிமுக, இந்திய யூனியன் முஸ்லீம் லீக், திராவிடர் கழகம், காவிரி டெல்டா விவாசாயிகள் சங்கம் உள்பட பல்வேறு கட்சிகள் கலந்து கொண்டன.
இக் கூட்டத்துக்கு ஜெயலலிதா எதிர்ப்பு தெரிவித்ததால் அதிமுக பங்கேற்காது என்று கருதப்பட்டது. ஆனாலும் இதில் அதிமுக பங்கேற்றது.
இக்கூட்டத்தை தொடங்கி வைத்து கருணாநிதி ேபசுகையில்,
காவிரி நடுவர் மன்றத்தின் இறுதி தீர்ப்பு வெளிவந்த பிறகு கடந்த பிப்ரவரி மாதம் நாமனைவரும் சந்தித்து நடுவர் மன்ற ஆணையில் உள்ள சாதக, பாதகங்கள் பற்றி விரிவாக விவாதித்தோம்.
விவாதத்திற்குப்பின் காவிரி நடுவர் மன்ற ஆணையின் மீது தேவையான நடவடிக்கையையும் பட்டியலிட்டு, சட்ட வல்லுநர்களுடனும் மற்றும் பொறியாளர்களுடனும் கலந்தாலோதித்து அவர்கள் வழங்கும் ஆலோசனைக்கேற்ப,
தமிழக மக்களின் நலனைப் பாதுகாக்கும் வகையில் 1956ம் ஆண்டு பன் மாநில நதிநீர் தாவாச் சட்டம் பிரிவு 5(3)ன் கீழ் ஒரு மனுவினை காவிரி நடுவர் மன்றத்தின் முன் தமிழக அரசு தாக்கல் செய்ய வேண்டுமென ஒருமனதாகத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
காவிரி நடுவர் மன்றத்தின் ஆணையின் முழு விவரமும் அனைத்துக் கட்சித் தலைவர்களுக்கும் வழங்கப்பட்டுள்ளது.
அதன் அடிப்படையில் அனைவரும் நடுவர் மன்றத்திடம் நாம் தாக்கல் செய்யவிருக்கிற மனுவில் எதை சேர்க்கலாம், எதை நீக்கலாம் என்ற உங்கள் கருத்துகளை தொகுத்து வந்திருப்பீர்கள் என நான் நம்புகிறேன்.
தமிழக அரசு சார்பில் நடுவர் மன்றத்தில் தாக்கல் செய்வதற்கான மனு குறித்து இன்னும் இறுதி செய்யவில்லை. காரணம் உங்கள் அனைவரின் கருத்துகளை அறிந்த பிறகுதான் அந்த மனுவினை இறுதி செய்யவிருக்கிறோம்.
அரசின் சார்பில் எடுக்கப்படுள்ள கருத்துகளின் நகல்கள் தற்போது தங்களுக்கு கொடுக்கப்பட்டுள்ளது. எனவே காவிரி நடுவர் மன்றத்திடம் எத்தகைய மனுவினை நாம் தரலாம் என்பது குறித்து உங்களுடைய கருத்துக்களையெல்லாம் தெரிவித்து, அரசு பொறியாளர்கள், சட்டவல்லுநர்கள் இணைந்து தயாரித்துள்ள அறிக்கையின் மீதும் உங்கள் கருத்துகளை தெரிவித்தால் அதன் பிறகு இறுதியான மனு தயாரிக்கப்பட்டு நடுவர் மன்றத்தின் முன் தாக்கல் செய்யப்படும் என்றார்.
பின்னர் அனைத்துக் கட்சித் தலைவர்களும் தங்களது கருத்துக்களைத் தெரிவித்துப் பேசினர்.
இதையடுத்து கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம்,
காவிரி நடுவர் மன்றம் தமிழகத்துக்கு சாதகமான தீர்ப்பு வழங்கிவிட்டதாக கர்நாடகம் தவறாக கற்பனை செய்து கொண்டு அதை உச்ச நீதிமன்றம் சென்று தடை செய்வதற்கும், அரசிதழில் பதிவு செய்வதைத் தடுப்பதற்கும் முயற்சி செய்து கொண்டுள்ளது.
தமிழகத்தைப் பொறுத்தவரை முதலில் நடுவர் மன்றத்திற்கு நமது உரிமைகளையும் தேவைகளையும் வலியுறுத்தி விளக்கம் கோரும் மறு ஆய்வு மனுவை தாக்கல் செய்துவிட்டு, அதன் பின்னர் தேவைப்பட்டால் நாமும் உச்ச நீதிமன்றத்தில் முறையீடு செய்வது என்றும் இக் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது என்று கூறப்பட்டுள்ளது.