சட்டசபையைக் கலக்கிய சன், ஜெயா!
சென்னை:சன் டிவி, ஜெயா டிவி தொடர்பாக சட்டசபையில் இன்று சூடான விவாதம் நடந்தது.
தமிழக சட்டசபையில் இன்று வருவாய், சிறைத்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடந்தது. அப்போது அதிமுக உறுப்பினர் ஹரி எழுந்து, அதிமுக ஆட்சியில், கொண்டு வரப்பட்ட கேபிள் டிவி சட்டம் குறித்துப் பேசினார்.
அப்போது குறுக்கிட்ட மின்துறை அமைச்சர் ஆற்காடு வீராசாமி, தமிழகத்திலேயே சன் டிவி மட்டும்தான் கேபிள் டிவி நிறுவனம் நடத்துவது போல தவறான கருத்து உள்ளது. பெரும்பான்மையான கேபிள் டிவி நிறுவனங்களை அதிமுகவினர்தான் நடத்துகின்றனர் என்று கூறி அதுதொடர்பான ஒரு பட்டியலையும் வாசித்தார்.
அப்போது, மேட்டூரில் ராஜாராம் என்பவர் கேபிள் டிவி நிறுவனம் நடத்தி வருகிறார். அவர் முன்னாள் அதிமுக அமைச்சர் செ.மா.வேலுச்சாமியின் உறவினர் என்றார்.
அப்போது எழுந்த செ.மா. வேலுச்சாமி, ராஜாராம் எனது உறவினர் என்பதை அமைச்சர் நிரூபிக்க வேண்டும். அப்படி நிரூபித்தால் எனது எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்கிறேன் என்றார்.
அதற்குப் பதில் அளித்த ஆற்காடு வீராசாமி, அதற்கு ஆதாரம் உள்ளது. நிரூபிக்க முடியும் என்று கூறி அமர்ந்தார். பின்னர் மீண்டும் எழுந்து, ராஜாராம் முன்னாள் அதிமுக அமைச்சர் செம்மலையின் உறவினர். அவரும் அதிமுகவைச் சேர்ந்தவர்தானே என்று கூறியபோது அதிமுகவினர் கேலி செய்து குரல் எழுப்பினர்.
பின்னர் ஆற்காடு வீராசாமி தொடர்ந்து பேசுகையில், கேபிள் டிவி நிறுவனங்களை கட்டுப்படுத்தும் சட்டத்தை தமிழக அரசு கொண்டு வர முடியாது. அதனால்தான் ஆளுநரால் அது திருப்பி அனுப்பப்பட்டு விட்டது என்றார்.
அப்போது குறுக்கிட்ட அதிமுக கொறடா கே.ஏ.செங்கோட்டையன், மத்தியில் நீங்கள்தானே ஆட்சியில் உள்ளீர்கள். மத்திய அரசிடம் சொல்லி சட்டத் திருத்தம் கொண்டு வரலாமே என்றார்.
அதற்குப் பதிலளித்த அமைச்சர் பொன்முடி, மத்திய அரசாலும் இந்த சட்டதத்தைக் கொண்டு வர முடியாது என்றார். பின்னர் மீண்டும் பேசிய ஆற்காடு வீராசாமி, சன் டிவி ஒரு தனி நபரின் குடும்பச் சொத்து அல்ல. அது பிரைவேட் லிமிட்டெட் கம்பெனி.
3 மாதங்களுக்கு ஒருமுறை கணக்கு வழக்குகளை வெளியிடுகிறார்கள். வருமான வரித்துறைக்கும் முறையாக வரி கட்டுகிறார்கள். ஆனால் ஜெயா டிவி யாருடையது, அதன் உரிமையாளர் யார், அதன் கணக்கு வழக்கு என்ன. அந்த விவரத்தை அதிமுகவினர் தெரிவிக்கத் தயாரா என்றார்.
அதற்குப் பதிலளித்த செங்கோட்டையன், வருமான வரித்துறைதான் உங்களிடம் உள்ளதே, நீங்களே விசாரித்துப் பார்த்துக் கொள்ள வேண்டியதுதானே என்றார்.
அதற்குப் பதில் தந்த ஆற்காடு வீராசாமி, அதை விசாரித்தபோதுதான் அதில் பல பினாமிகள் தொடர்பு கொண்டிருப்பது தெரிய வந்தது. அதை உங்களது வாயால் அறியத்தான் இந்தக் கேள்வியைக் கேட்டேன் என்றார். இப்படியாக விவாதம் படு சூடாக போனது.












Click it and Unblock the Notifications