சென்னையை கலக்கிய 2 கொலைகள்:ஒரே நாளில் குற்றவாளிகள் அதிரடி கைது!
சென்னை:கள்ளக்காதல் காரணமாக கணவரை ஆள் வைத்துக் கொன்ற மனைவியை போலீஸார் கைது செய்தனர். அதேபோல கோட்டூர்புரத்தில் டாக்டரைக் கொன்று நகைகளைக் கொள்ளயடித்த இருவரையும் சென்னை போலீஸார் 24 மணி நேரத்திற்குள் கைது செய்தனர்.
சென்னை நகரில் நேற்றும், நேற்று முன்தினமும் நடந்த இரு கொலைகள் பரபரப்பை ஏற்படுத்தின. இந்த குற்றங்களில் தொடர்புடைய குற்றவாளிகளை 24 மணி நேரத்திற்குள் போலீஸார் கைது செய்தனர்.
திமுக முன்னாள் மாவட்டச் செயலாளர் ஆர்.டி.சீதாபதியின் வளர்ப்பு மகள் தமிழ்ச் செல்வி. இவரது கணவர் டாக்டர் ரமேஷ் சந்தர். சென்னை மாநகராட்சியில் மருத்துவ அதிகாரியாகப் பணியாற்றி வந்தார். தனியாக கிளினிக்கும் வைத்திருந்தார்.
கோட்டூர்புரத்தில் வசித்து வந்த இவரது கிளினிக் பொன்னியம்மன் கோவில் தெருவில் உள்ளது. நேற்று முன்தினம் இரவு கிளினிக்கில் ரமேஷ் சந்தரும், அவரது உதவியாளர் சோனியாவும் இருந்தனர்.
சோனியா பாத்ரூம் போய் விட்டுத் திரும்பியபோது வாயில் ரத்தம் ஒழுகியபடி, ரமேஷ்சந்தர் மர்மமான முறையில் பிணமாகக் கிடந்தார். விரைந்து வந்த போலீஸார் தீவிர விசாரணையைத் தொடங்கினர்.
5 தனிப்படைகள் அமைக்கப்பட்டு கொலையாளிகளைப் பிடிக்க துரித நடவடிக்கை எடுக்கப்பட்டது. கொலையாளிகள் இருவரையும் நேரில் பார்த்த டாக்டரின் உதவியாளர் சோனியா இருவரையும் முன்பே நேரில் பார்த்துள்ளதாக தெரிவித்ததால் போலீஸாருக்கு பெரும் உதவியாக இருந்தது.
அவர் கூறிய அடையாளங்களை வைத்து இருவரையும் வளைத்துப் பிடிக்க போலீஸார் நடவடிக்கை எடுத்தனர். இந்த நிலையில் நேற்று இரவு புதுக்கோட்டையில் இருவர் போலீஸ் பிடியில் சிக்கினர். அவர்களிடம் போலீஸார் நடத்திய விசாரணையில் இவர்கள்தான் டாக்டரைக் கொன்றவர்கள் எனத் தெரிய வந்தது.
சிவகங்கை மாவட்டம் சாக்கோட்டையைச் சேர்ந்த விஜய் கண்ணன், புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடியைச் சேர்ந்த ராகவன் ஆகிய இருவரும் 20 வயதுக்கு உட்பட்டவர்கள்.
அயோத்தி குப்பத்தைச் சேர்ந்த இரு ரவுடிகளுடன் சேர்ந்து டாக்டரைக் கொன்றதாக அவர்கள் கூறியுள்ளனர். முன்பகை ஏதாவது இதற்குக் காரணமா என்பது தெரியவில்லை.
இவர்களிடமிருந்து டாக்டரிடமிருந்து திருடப்பட்ட மோதிரம், செல்போன், தங்கச் சங்கிலி ஆகியவற்றையும் போலீஸார் பறிமுதல் செய்தனர். பின்னர் இருவரும் சென்னைக்குக் கொண்டு வரப்பட்டனர்.
கணவரைக் கொன்ற மனைவி:
இதேபோல சென்னையில் பரபரப்பை ஏற்படுத்திய இன்டீரியர் டெக்கரேடர் கொலை வழக்கில் அவரது மனைவியை 5 மணி நேரத்திலேயே போலீஸார் கைது செய்தனர்.
சென்னை தரமணி, பெரியார் நகர் ராமசாமி தெருவைச் சேர்ந்தவர் கார்த்தீபன் (33). இன்டீரியர் டெக்கரேட்டர் ஆக இருந்து வந்தார். இவரது மனைவி அபிராமி (25). இவர்களுக்கு ஒரு பெண் குழந்தை உள்ளது.
கார்த்தீபன் அடிக்கடி வேலை நிமித்தம் வெளிமாநிலங்களுக்கு போய் வருவது வழக்கம். இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு கார்த்தீபன் வீட்டில் படுகொலை செய்யப்பட்டார். அவரது மனைவியிடம் போலீஸார் விசாரித்ததில், இரண்டு பேர் வந்து தனது கணவரைக் கொலை செய்து விட்டு தன்னிடமிருந்த நகையைக் கொள்ளையடித்து விட்டதாக கூறினார்.
ஆனால் அவரது பேச்சில் போலீஸாருக்குச் சந்தேகம் ஏற்பட்டது. இதையடுத்து அவரிடம் பெண் போலீஸாரை வைத்து முறைப்படி விசாரித்ததில் உண்மையக் கக்கினார் அபிராமி.
போலீஸாரிடம் அபிராமி கொடுத்த வாக்குமூலம்,
எம்.ஏ வரை படித்துள்ளேன். எங்களுக்கு தரமணி, மந்தைவெளி, மகாத்மாகாந்தி நகர் ஆகிய இடங்களில் சொந்தமாக வீடுகள் உள்ளன. கல்யாணத்துக்கு முன்பு நான் அடிக்கடி தரமணி வீட்டுக்குச் செல்வேன். அப்போது வீட்டின் மாடியில் குடியிருந்து வந்த மெட்ரோ வாட்டரில் வேலை பார்த்து வந்த ஜோதியுடன் காதல் ஏற்பட்டது.
இருவரும் அடிக்கடி சந்தித்துப் பேசி உல்லாசமாக இருப்போம். இந்த நிலையில், கல்லூரிக்குப் போகும் போது பார்த்தீபன் பழக்கமானார். அவருடனும் காதல் ஏற்பட்டது. இருவரில் யாரைக் கல்யாணம் செய்வது என்ற குழப்பம் வந்தபோது, பார்த்தீபனைக் கல்யாணம் செய்வது, ஜோதியுடன் நட்பைத் தொடருவது என்ற முடிவுக்கு வந்தேன்.
அதன்படி நான்கு ஆண்டுகளுக்கு முன்பு பார்த்தீபனுடன் கல்யாணம் ஆனது. ஆனால் அதன் பின்னரும் ஜோதியுடன் நட்பைத் தொடர்ந்தேன்.
எனது கணவர் வெளியூருக்குப் போகும்போதெல்லாம் இருவரும் தனிமையில் சந்தித்து உல்லாசமாக இருப்போம். அடிக்கடி உறவும் கொள்வோம்.
2 ஆண்டுகளுக்கு முன்பு எனக்கு பெண் குழந்தை பிறந்தது. அது தனது சாயலில் இல்லை என்று கூறி பார்த்தீபன் என்னுடன் சண்டை போட்டார். இதனால் நான் வேதனை அடைந்தேன். இதுகுறித்து ஜோதியிடம் கூறியபோது அவர் எனக்கு ஆறுதல் கூறினார். அது எனக்கு பெரும் நிம்மதியாக இருந்தது.
அவரது அன்பு மட்டுமே போதும் என்ற முடிவுக்கு வந்தேன். இந்த நிலையில் ஜோதி என்னிடம், உனது சந்தோஷத்திற்காக எதையும் செய்வேன் என்றார்.
இதையடுத்து சம்பவத்தன்று ஹைதராபாத் போய் விட்டு இரவு வீடு திரும்பினார் பார்த்தீபன். அன்று இரவு அவருடன் உறவு கொண்டேன். இனால் அவர் அசதியாகி விட்டார். பின்னர் ஜோதிக்கு தகவல் கொடுத்தேன். அவரும், அவரது நண்பரும் சேர்ந்து என் கண் முன்பாகவே பார்த்தீபனை வெட்டிக் கொன்றனர்.
பின்னர் அவர்கள் போகும்போது, எனது கழுத்தில் கிடந்த தங்கச் சங்கிலியை கழற்றி ஜோதியிடம் கொடுத்தேன். பிறகு கையில் கத்தியால் கீறி விட்டுச் செல்லும்படியும் கூறினேன் என்று வாக்குமூலம் கொடுத்துள்ளார் அபிராமி.
சில மாதங்களுக்கு முன்புதான் சென்னை அருகே வக்கீல் கணவரின் தம்பியுடன் கள்ளக்காதல் கொண்டிருந்த பெண், அவரை வைத்து தனது கணவரைக் கொலை செய்து பரபரப்பை ஏற்படுத்தினார். இப்போது மீண்டும் அதேபோன்ற ஒரு சம்பவம் நடந்துள்ளது சென்னை மக்களைப் பதற வைத்துள்ளது.