ஹூஸ்டன்: நாசா விண்வெளி மையத்தில் பொறியாளர்சுட்டுக் கொலை- கொலையாளியும் தற்கொலை
ஹூஸ்டன்:அமெரிக்காவின் நாசா விண்வெளி ஆய்வு மைய வளாகத்திற்குள் துப்பாக்கியுடன் புகுந்த காண்ட்ராக்ட் ஊழியர் ஒரு பொறியாளரை சுட்டுக் கொன்று விட்டு தானும் தற்கொலை செய்து கொண்டார். இதனால் அமெரிக்காவில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
உலகிலேயே உச்ச கட்ட பாதுகாப்பு வளையத்தின் கீழ் உள்ள பகுதியாக கருதப்படுவது நாசா அமைப்பு. ஹூஸ்டனில் உள்ள இந்த அமைப்பின் ஜான்சன் விண்வெளி ஆய்வு மைய வளாகத்திற்குள் நேற்று மாலை ஒரு நாசா காண்ட்ராக்ட் ஊழியர் துப்பாக்கியுடன் நுழைந்தார்.
இதனால் ஜான்சன் மையத்தில் பரபரப்பு ஏற்பட்டது. மையத்தின் நுழைவாயில்கள் மூடப்பட்டன. மையத்தின் நடவடிக்கைகள் அனைத்தும் நிறுத்தப்பட்டன.
அந்த நபர் இருந்த பகுதியை பாதுகாப்புப் படையினர் சுற்றி வளைத்தனர். ஆனால் அதற்குள் ஒரு பெண் நாசா ஊழியர் மற்றும் ஒரு பொறியாளரை அந்த நபர் பிணையக் கைதியாக பிடித்து வைத்துக் கொண்டார்.
ஆனால் அதைப் பொருட்படுத்தாமல், பாதுகாப்புப் படையினர் அந்த நபரை நெருங்கியதால், பீதியடைந்த அந்த நபர் பிணையக் கைதிகளில் ஒருவரை சுட்டுக் கொன்றார். பின்னர் தானும் சுட்டுத் தற்கொலை செய்து கொண்டார். பிணையக் கைதியாக பிடிக்கப்பட்ட பெண் எந்த விதக் காயமும் இன்றித் தப்பினார்.
எதற்காக அந்த காண்ட்ராக்ட் ஊழியர் இந்த தாக்குதலை நடத்தினார் என்று தெரியவில்லை.
சில நாட்களுக்கு முன்புதான் விர்ஜீனியா டெக் பல்கலைக்கழக வளாகத்தில் தென் கொரிய மாணவரின் வெறிச் செயலுக்கு 32 பேர் பலியானார்கள். இந்த பரபரப்பு அடங்குவதற்குள் நாசாவுக்குள் துப்பாக்கியுடன் மர்ம நபர் புகுந்தது அமெரிக்காவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications