100 கோடி பேரின் ஜாதகத்தை 2 பேர் நிர்ணயிப்பதுஜனநாயக கேடு: கருணாநிதி
சென்னை:100 கோடி பேரின் ஜாகதத்தை 2 அல்லது 3 பேர் சேர்ந்து நிர்ணயிப்பது என்பது ஜனநாயகத்திற்கு மிகப் பெரிய கேடு என்று முதல்வர் கருணாநிதி கூறியுள்ளார்.
சட்டசபையில் இன்று பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான 27 சதவீத இட ஒதுக்கீட்டுக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்க உச்சநீதிமன்றம் மறுத்துள்ளது குறித்து பல்வேறு உறுப்பினர்கள் சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானங்களைக் ெகாண்டு வந்து பேசினர்.
இதற்கு முதல்வர் கருணாநிதி பதிலளிக்கையில், நீதிக்கட்சி காலம் முதல் இன்று வரை இட ஒதுக்கீடு பல இன்னல்களை சந்தித்து வந்திருக்கிறது.
ஜனநாயகத்தில் 100 கோடி பேரின் ஜாகதத்தை 2 அல்லது 3 பேர் நிர்ணயிக்கக் கூடாது. அப்படி ஒரு நிலை ஏற்பட்டால் அது ஜனநாயகத்திற்கு மிகப் பெரிய கேடு, தீங்கு, பெரும் தீமை என்பதை உலகத்திற்கு அறிவித்தாக வேண்டிய நிலையில் உள்ளேன்.
பாமக நிறுவனர் ராமதாஸ் என்னை தொலைபேசியில் தொடர்பு கொண்டு அடுத்து என்ன நடவடிக்கை எடுப்பது என்று கேட்டார்.
மேலும் நாங்கள் போராட்டம் நடத்துகிறோம், நீங்கள் அதற்கு ஆதரவு தர வேண்டும் என்று அவர் கேட்டார். அதற்கு போராட்டம் என்றால் எல்லோரும் சேர்ந்தே ஆரம்பிப்போம் என்று நான் சொன்னேன். இதையடுத்து நான் பிரதமர், மத்திய அமைச்சர் அர்ஜூன் சிங், பரத்வாஜ், சோனியா காந்தி ஆகியோருக்கு கடிதம் ஒன்று எழுதினேன்.
அதில் நான் குறிப்பட்டதை தான் ராமதாஸ் அவர்களும் தனது அறிக்கையில் வெளியிட்டுள்ளார். தற்போது உச்சநீதிமன்றத்தின் தடை ஆணையை ரத்து செய்ய கோரி மத்திய அரசு தாக்கல் செய்த மனு நிராகரிக்கப்பட்டுள்ளது.
எனவே நமக்குள்ள ஒரே வழி நாடாளுமன்றத்தின் இரு அவைகளையும் உடனே கூட்டி விரிவாக விவாதித்து பிற்படுத்தப்பட்டவர்களுக்கு இடஒதுக்கீட்டிற்கு எவ்வித பின்னடைவும் ஏற்படாமல் பார்த்துக் கொள்ள வேண்டும் என்று நான் எனது கடிதத்தில் குறிப்பிட்டு இருந்தேன். அதை தான் ராமதாஸ் அவர்களும் குறிப்பிட்டுள்ளார்.
ஆகவே நாடு முழுவதும் இருக்கின்ற நலிந்தோர், அடக்ககப்பட்டோர், ஒடுக்கப்பட்டோர், நான்காம் ஜாதி, ஜந்தாம் ஜாதி என தள்ளப்பட்டோர் எரிமலையாக மாறாமல் இருக்க, உடனடியாக இந்தப் பிரச்சினைக்கு மத்திய அரசு வழி காண வேண்டும் என்றார் கருணாநிதி.
முன்னதாக ஜெயா டிவிக்கும், ஜெயலலிதாவுக்கும் வந்த மிரட்டல் கடிதம் குறித்து கருணாநிதி விளக்குகையில், ஜெயலலிதா முதல்வராக இருந்தபோதே அவருக்கு நிறைய மிரட்டல் கடிதங்கள் வந்துள்ளன. தற்போது வந்துள்ள மிரட்டல் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. அவருக்குரிய பாதுகாப்பும் அதிகரிக்கப்பட்டுள்ளது என்றார்.












Click it and Unblock the Notifications