ஈழம்: இந்தியா தலையிட வேண்டும்-ராமதாஸ்
சென்னை:இலங்கைக்கு ஆயுதங்கள் வழக்கக் கூடாது என்று வலியுறுத்தி சென்னையில் டாக்டர் ராமதாஸ் தலைமையில் பாமகவினர் முழக்க ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
நிகழ்ச்சியில் ராமதாஸ் பேசுகையில், 1983ம் ஆண்டு இலங்கையில் இனப் பிரச்சினை வெடித்தபோது அப்போதைய பிரதமர் இந்திரா காந்தி எப்படி அதைக் கையாண்டாரோ அதே போல இப்போதும் மத்திய அரசு தமிழர் பிரச்சினையில் தலையிட்டு அமைதி ஏற்பட உதவ வேண்டும்.
இலங்கையில் நிலைமை மோசமாகி வருகிறது. அப்பாவித் தமிழர்களின் வாழ்க்கை கேள்விக்குறியாகி வருகிறது. எனவே இந்த விஷயத்தில் மத்திய அரசு தலையிட வேண்டியது உடனடி அவசியம் ஆகும்.
இந்தியாவின் தலையீடு இல்லாமல் ஈழப் பிரச்சினைக்குத் தீர்வு காண்பது இயலாத காரியம்.
பாதிக்கப்படுள்ள தமிழர்களுக்கு உதவ மத்திய அரசு விரும்பினாலும் கூட வெளியுறவுத்துறையில் உள்ள சில அதிகாரிகள் இலங்கை அரசுக்கு ஆதரவாக நடந்து கொள்கின்றனர். இலங்கைக்கு அதிக அளவில் ஆயுதங்களை வழங்க வேண்டும் என அவர்கள் மத்திய அரசை தவறான பாதைக்கு இட்டுச் சென்று கொண்டிருக்கிறார்கள்.
மறைந்த இந்திரா காந்தி எடுத்திருந்த நிலையைப் போலவே இப்போதும் எடுக்க வேண்டும் என காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியைக் கேட்டுக் கொள்கிேறன். மத்திய அரசு இலங்கைப் பிரச்சினையில் உடனடியாகத் தலையிட வேண்டும் என வேண்டிக் கேட்டுக் கொள்கிறேன்.
முதல்வர் கருணாநிதியும் இலங்கைப் பிரச்சினையில் ஆக்கப்பூர்வமான நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும். தமிழர்கள் கொல்லப்படுவதை தடுத்து நிறுத்துவதை உறுதி செய்ய உறுதியான நடவடிக்கையை அவர் மேற்கொள்ள ேவண்டும்.
மத்திய அரசைத் தொடர்பு கொண்டு இலங்கைக்கு ஆயுதங்கள் வழங்கக் கூடாது என்று வலியுறுத்த வேண்டும்.
உலக சமுதாயம் ஒன்று கூடி கேட்டுக் கொண்டும் கூட அப்பாவித் தமிழர்கள் மீதான ராணுவ தாக்குதலை அதிபர் ராஜபக்ஷே நிறுத்திக் கொள்ளாதது கடும் கண்டனத்துக்குரியது என்றார் ராமதாஸ்.
நிகழ்ச்சியில் பாமக தலைவர் ஜி.கே.மணி, தமிழர் தேசிய இயக்கத் தலைவர் பழ. நெடுமாறன், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் இணை பொதுச் செயலாளர் செல்வப்பெருந்தகை உள்ளிட்டோரும் பேசினர்.












Click it and Unblock the Notifications