அதிகாரிகள் மீது அரிசி மூடை வீச்சு-துணிகரமாகதப்பிய ரேஷன் அரிசி கடத்தல்காரர்கள்
நாகர்கோவில்:ரேஷன் அரிசி கடத்தலைத் தடுக்க முயன்ற அதிகாரிகள் மீது அரிசி மூடைகளை தூக்கி எறிந்த விட்டு அரிசிக் கடத்தல் கும்பல் துணிகரமாக தப்பியது.
தமிழகத்தின் பல பகுதிகளிலும் ரேஷன் அரிசி கடத்தல் அமோகமாக நடந்து வருகிறது. இந்த நிலையில் கன்னியாகுமரி சாலையில், நேற்று அதிகாலை ஒரு கும்பல் அரிசி கடத்துவதாக வருவாய்த்துறை அதிகாரிகளுக்குத் தகவல் கிடைத்தது.
இதையடுத்து அதிகாரிகள் அங்கு விரைந்தனர். வட்ட வழங்கல் அதிகாரி ராதாகிருஷ்ணன், வருவாய் ஆய்வாளர் செந்தில்குமார் ஆகியோர் சாலையின் ஒரு இடத்தில் தயார் நிலையில் காத்திருந்தனர்.
அப்போது ஒரு லாரி வேகமாக வந்து கொண்டிருந்தது. அந்த லாரியை தடுத்து நிறுத்த அதிகாரிகள் முயன்றனறர். ஆனால் அந்த லாரி வேகமாக சென்று விட்டது.
அந்த லாரிக்குப் பின்னால் பாதுகாப்புக்காக 4 பேர் 2 மோட்டார் சைக்கிளில் சென்றனர். அதிகாரிகள் தங்களது ஜீப்பில் அரிசிக் கடத்தல் கும்பலை விரட்டிச் சென்றனர்.
அகஸ்தீஸ்வரம் கல்லூரி சாலையில் நான்கு முறை லாரி சுற்றிச் சுற்றி வந்தது. அதிகாரிகளும் விடாமல் துரத்தினர். இருந்தாலும் லாரி நிற்பது போலத் தெரியவில்லை. இந்த நிலையில் லாரியில் இருந்தவர்கள் அரிசி மூட்டைகளை எடுத்து அதிகாரிகளின் ஜீப் மீது எறிந்தனர். இதனால் ஜீப் நிலை குலைந்தது. இருந்தாலும் ஜீப் டிரைவர் சமாளித்துக் கொண்டு லாரியைத் துரத்தினார்.
கிட்டத்தட்ட 15 அரிசி மூட்டைகள் மீது ஜீப் மீது வீசப்பட்டது. சாலையில் சிதறிய அரிசியை அப்பகுதி மக்கள் எடுத்துக் கொண்டு ஓடினர். இதனால் அந்த சாலையே பரபரப்பில் ஆழ்ந்தது.
இப்படியாக சுமார் 70 கிலோமீட்டர் தூரம் வரை அதிகாரிகளுக்கு டேக்கா கொடுத்த அந்த கடத்தல் லாரி பின்னர் தாமரைக்குளம் என்ற இடத்தில் நின்றது. லாரி டிரைவரும், லாரியில் வந்தவர்களும் அங்கிருந்து தப்பி ஓடி விட்டனர்.
லாரியுடன் அரிசி மூட்டைகளைப் பறிமுதல் செய்த அதிகாரிகள் அவற்றை நுகர்பொருள் வாணிபக் கழக அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர். அந்த லாரியில் ரூ. 60 ஆயிரம் மதிப்புள்ள 5 டன் அரிசி இருந்தது.
லாரியிலிருந்து தப்பி ஓடிய 6 பேரையும் போலீஸார் தேடி வருகின்றனர்.