நான் பிரியங்கா காந்தி அல்ல!
சுல்தான்பூர் (உ.பி.)என்னை யாரும் பிரியங்கா காந்தி என்று கூப்பிட வேண்டாம். பிரியங்கா வதேரா என்றே கூப்பிடுங்கள் என காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியின் மகள் பிரியங்கா கூறியுள்ளார்.
உ.பி. மாநில சட்டசபைத் தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர்களுக்கு ஆதரவாக பிரியங்கா தீவிரப் பிரசாரத்தில் குதித்துள்ளார். சுல்தான்பூர் மாவட்டம் திஹ் என்ற கிராமத்தில் அவர் சுற்றுப்பயணம் செய்து வாக்கு சேகரித்தார்.
அப்போது திரளாக கூடியிருந்த கிராமத்தினர் மத்தியில் பிரியங்கா பேசுகையில், என்னை யாரும் பிரியங்கா காந்தி என்று கூப்பிடாதீர்கள். பிரியங்கா வதேரா என்றே கூப்பிடுங்கள் (பிரியங்காவின் கணவர் பெயர் ராபர்ட் வதேரா என்பது குறிப்பிடத்தக்கது).
உங்கள் குழந்தைகளின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டும், ஜாதி அரசியலுக்கு விடை கொடுப்பதை மனதில் கொண்டும் காங்கிரஸ் கட்சிக்கு ஓட்டுப் போடுங்கள்.
சிறு வயதிலிருந்து இந்தக் கிராமத்திற்கு நான் பலமுறை வந்து போயுள்ளேன். ஆனால் இப்போது எனது குழந்தைகளுடன் இந்த கிராமத்திற்கு வந்துள்ளேன். இது பெருமையாக உள்ளது என்றார் பிரியங்கா.
பிரியங்காவின் எளிமையான பேச்சும், எளிமையான தோற்றமும் கிராமத்தினரை வெகுவாகக் கவர்ந்து விட்டது. குறிப்பாக அந்தக் கிராமத்துப் பெண்கள் பிரியங்காவின் பேச்சை கைதட்டி வரவேற்று ரசித்தனர்.