தமிழகத்தில் தீவிரவாதிகள் நடமாட்டம்: காங்.
சென்னை:தமிழகத்தில் தீவிரவாதிகளின் நடமாட்டம் அதிகமாக இருக்கிறது அதை தடுக்க வேண்டும் என காங்கிரஸ் எம்எல்ஏ சுதர்சனம் தெரிவித்துள்ளார்.
சட்டசபையில் இன்று காவல் துறையின் மானிய கோரிக்கையில் கலந்து கொண்ட சுதர்சனம் பேசியதாவது,
தமிழகம் அமைதிப் பூங்காவாகத் திகழ்கிறது. அதனால் தான் தமிழகத்தில் தொழில் தொடங்குவதற்கு ஏராளமான கம்பெனிகள் தமிழகத்திற்கு வருகின்றனர்.
தமிழ் மண்ணில் ராஜீவ் காந்தி உயிரிழந்தால் விடுதலைப்புலிகள் மீது எங்களுக்கு அதிருப்தி உண்டு.
இலங்கை தமிழர்கள் அமைதியாக வாழ வேண்டும். அதற்காக தமிழ்நாட்டின் அமைதி பாதிக்கப்படக்கூடாது. சமீபத்தில் இவர்களுக்காக நடந்த ஆயுதக்கடத்தல் தடுக்கப்பட்டுள்ளது. இந்த ஆயுதக் கடத்தல் இலங்கை அகதிகள் மூலம் கடத்தப்படுகிறது.
விடுதலைப்புலிகள் ஆயுதம் கடத்துவதை தடுக்க வேண்டும். தமிழகத்தில் தீவிரவாதிகளின் நடமாட்டம் அதிகரித்து வருகிறது. அதை தடுக்க கடுமையாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.
நேற்று மண்டபம் அகதிகள் முகாமிற்கு பின்புறம் தெர்மாகோலில் வெடிகுண்டுகள் இருந்தது கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. இதனால் தமிழகத்தில் தீவிரவாதத்தை தடுக்க முதல்வர் கருணாநிதி தீவிர முயற்சி எடுத்து வருகிறார். இருந்தாலும் மேலும் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
போக்குவரத்து போலீசார் நடு ரோட்டில் வண்டியை நிறுத்தி பணம் வசூலிப்பை நாளிதழில் படத்துடன் காட்டுகின்றனர். இப்படி தப்பு செய்கின்ற அதிகாரிகளை கடுமையாக தண்டிக்க வேண்டும். ஒரு சில அதிகாரிகளின் தவறால் ஒட்டு மொத்த காவல் துறையின் மரியாதையும் குறைகிறது.
கர்நாடக, ஆந்திரா மாநிலங்களில் இருப்பது போல தமிழகத்திலும் பெண் போலீஸாருக்கு புடவையை சீருடையாக வழங்க வேண்டும் என்றார்.