நுழைவுதேர்வு தீர்ப்பு தலைவர்கள் வரவேற்பு
சென்னை:தமிழகத்தில் தொழிற்படிப்புகளுக்கான நுழைவுத் தேர்வை ரத்து செய்த தமிழக அரசின் சட்டம் செல்லும் என சென்னை உயர்நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பை பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் உள்ளிட்ட தலைவர்கள் வரவேற்றுள்ளனர்.
தீர்ப்பை வரவேற்று டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
கடந்த 1984ம் ஆண்டிலிருந்தே நுழைவுத் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்று கோரி வருகிறோம். அதற்காக போராட்டங்களையும் நடத்தியுள்ளோம்.
எங்களது கோரிக்கை இப்போதுதான் நிறைவேறியுள்ளது. உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பு மகிழ்ச்சி அளிப்பதாக உள்ளது. கடந்த ஆட்சியின்போது இரண்டு முறை நுழைவுத் தேர்வை ரத்து செய்ததாக அறிவித்தார்கள். ஆனால் அது கண் துடைப்பு நடவடிக்கை.
ஆனால் தற்போது திமுக ஆட்சியில் முதல்வர் கருணாநிதி உறுதியான முறையில் நுழைவுத் தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ளது. இதற்காக முதல்வர் கருணாநிதியையும், தமிழக அரசையும் பாராட்டுகிறேன் என்று கூறியுள்ளார்.
திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி வெளியிட்டுள்ள அறிக்கையில், ஒடுக்கப்பட்ட மக்களின் வாழ்வில் பால் வார்த்தது போல தீர்ப்பு வந்துள்ளது. கடந்த ஆட்சியில் அரைகுறையாக பிறப்பிக்கப்பட்ட ஆணையாக இல்லாமல், இந்த முறை முதல்வர் கருணாநிதி நிபுணர் குழுவை அமைத்து அதன் பரிந்துரையின் பேரில் முறைப்படி சட்டமாக கொண்டு வந்தார் என்று கூறியுள்ளார்.
காங்கிரஸ் தலைவர் கிருஷ்ணசாமியும் தீர்ப்பை வரவேற்றுள்ளார்.