அரசியல் நாகரீகம் இல்லையே .. கருணாநிதி வேதனை
சென்னை: தமிழகத்தில் அரசியல் நாகரீகம் சுத்தமாக இல்லை என்று முதல்வர் கருணாநிதி கூறியுள்ளார்.
சென்னையில் என்சைக்ளோபீடியா பிரிட்டானிகா நிறுவனத்தின் பிரிட்டானியா கன்சைஸ் என்சைக்ளோபீடியா என்ற ஆங்கில தகவல் களஞ்சியத்தை விகடன் குழுமம் தமிழில் மொழி பெயர்ந்து வெளியிட்டுள்ளது.
இதை முதல்வர் கருணாநிதி கலந்து கொண்டு வெளியிட்டார். முதல் பிரதியை சக்தி குழுமத்தின் தலைவர் தொழிலதிபர் பொள்ளாச்சி நா.மகாலிங்கம் பெற்றுக்கொண்டார்.
கருணாநிதி நிகழ்ச்சியில் பேசுகையில், தமிழ்க் குடும்பத்தில் ஒரு தகவல் களஞ்சியத்தை வெளியிடுகிறார்கள் என்றால் நான் ஆச்சரியப்படவில்லை. இவர்கள் வெளியிடாவிட்டால் தான் ஆச்சரியப்பட்டிருப்பேன்.
நான் விகடனை தாக்கிப் பேசுவதும், விகடன் என்னைத் தாக்கி எழுதுவதும் சகஜம். நான் அவர்களை விமர்ச்சித்திருக்கிறேன். இதற்கெல்லாம் அடிக்கடி நான் சொல்வதைப் போல, அண்ணா சொன்னதைப் போல, மூத்த தலைவர்கள் சொல்வதைப் போல இவை எல்லாவற்றையும் கடந்து ஒரு அரசியல் நாகரீகம், பண்பாடு இருக்க வேண்டும். ஆனால் இப்போது அரசியல் நாகரீகம் இல்லை.
சட்டசபையில் பேசும்போது நான் யார் யாருடன் அரசியல் நடத்தியுள்ளேன் என்று சொன்னேன். இந்திராகாந்தி, காமராஜர், பக்தவத்சலம், எம்ஜிஆர் ஆகியோருடன் அரசியல் நடத்தியுள்ளேன். இப்போது என் கதி இப்படியா ஆகும் என கண் கலங்க நான் சொல்ல, மற்றவர்கள் அத்தனை பேரும் கண் கலங்கினார்கள். என்ன காரணம்? அந்த பண்பாட்டை நாம் இழந்துவிட்டோம்.
இந்த விழாவில் ஒரு மகிழ்ச்சியான செய்தியை சொல்ல விரும்புகிறேன். மூன்று புத்தகங்களின் விலை ரூ. 4 ஆயிரம். ஏப்ரல் 30ம் தேதிக்குள் வாங்குபவர்களுக்கு ரூ. 2 ஆயிரம் என்ற அளவில் சலுகை விலையில் வாங்கிக் கொள்ளாம் என்று இதன் பதிப்பாளர் சீனவாசன் தெரிவித்தார்.
இதையடுத்து அமைச்சர்கள் தங்கம் தென்னரசுவிடமும், பொன்முடியிடமும் ஏப்ரல் 30 வரை காத்திருக்காமல் அதற்கு முன்னதாகவே நமக்கு தேவையான புத்தகங்களை வாங்கிக் கொள்ள வேண்டும் என்று அவர்களிடம் கூறினேன். எத்தனை புத்தகம் வாங்க வேண்டும் என்று நீங்களே அறிவித்துவிடுங்கள் என்று அவர்கள் கூறினார்கள்.
உயர்கல்வித் துறை சார்பில் கல்லூரி நூலகங்களில் வைப்பதற்காக 500 படிகள், அதாவது 500 காப்பிகள். மூன்று நூல்கள் சேர்ந்தது ஒரு படி. பள்ளிக் கல்விக் துறை சார்பில் பொது நூலகங்களில் வைப்பதற்காக 1000 படிகள் வாங்கப்படும்.
1,500 புத்தக படிகள் அதாவது மொத்தம் 4500 புத்தகங்கள் தமிழக அரசு சார்பில் வாங்கப்படும் என்று தெரிவித்து உடனே நடைமுறைக்கு வரும் என்று உறுதி அளிக்கிறேன். இந்த புத்தகங்கள் நாளைக்கே வாங்கப்படும் என்றார் கருணாநிதி.












Click it and Unblock the Notifications