ஸ்ரீவில்லிபுத்தூர்: கோழியால் கோஷ்டி மோதல்வீடுகளுக்கு தீ-துப்பாக்கிச் சூடு
ஸ்ரீவில்லிபுத்தூர்:விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே கோழி மீது மோட்டார் சைக்கிள் ஏறியதால் பெரும் கோஷ்டி மோதல் மூண்டது. ஒரு பிரிவினரின் வீடுகளுக்குத் தீவைக்கப்பட்டது.
ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள கூமாபட்டி என்ற கிராமத்தைச் சேர்ந்தவர் ரமணி. இவர் அதே ஊரில் உள்ள ஆர்.சி.தெரு வழியாக தனது மோட்டார் சைக்கிளில் சென்றார். அப்போது ஆனந்தம்மாள் என்ற பெண்ணின் கோழி மீது வண்டி ஏறி விட்டது. இதில் கோழி நசுங்கி இறந்து போனது.
இதையடுத்து தனது வண்டியுடன் வேகமாக அங்கிருந்து போய் விட்டார் ரமணி. கோழி மோதியதால் வண்டியில் ரத்தம் சொட்டியது. இதைப் பார்த்து அவரது உறவினர்களும், நண்பர்களும் என்ன ஏது என்று விசாரித்துள்ளனர்.
இந்த சமயத்தில், கோழியைக் கொன்றதற்கு நஷ்ட ஈடு கேட்டு ஆனந்தமமாள் தனது தரப்பு ஆட்களுடன் அங்கு வந்தார். இரு தரப்பினருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இறுதியில் இது கோஷ்டி மோதலாக மாறியது.
இதில் ஆனந்தம்மாளுக்கு சரமாரியாக அடி விழுந்துள்ளது. பின்னர் லிங்கம் என்பவரின் வீட்டுக்குத் தீவைக்கப்பட்டது. சேத்தூரான் என்பவரின் கோழிப்பண்ணைக்கும் தீவைக்கப்பட்டது. இதில் ஏராளமான கோழிகள் இறந்தன.
மோதலில் பலர் காயமடைந்தனர். ஈஸ்வரன் என்பவருக்கு கத்திக் குத்துக் காயம் ஏற்பட்டது. அவரது நிலை கவலைக்கிடமாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கலவரம் வெடித்தைத் தொடர்ந்து போலீஸார் விரைந்து வந்தனர். கலவரத்தில் ஈடுபட்டவர்களை கலைந்து போகுமாறு போலீஸார் கூறியும் அவர்கள் போகவில்லை. இதையடுத்து தடியடி நடத்திக் கலைக்கப்பட்டனர்.
அப்போது சிலர் போலீஸார் மீது கல்வீசித் தாக்கினர். இதில் 4 போலீஸார் காயமடைந்தனர். நிலைமை மோசமடைந்ததைத் தொடர்ந்து வானை நோக்கி எச்சரிக்கை செய்யும் வகையில் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது.
அதன் பிறகு கலவரக் கும்பல் அங்கிருந்து ஓடியது. இந்த சம்பவம் தொடர்பாக 45 பேரை போலீஸார் கைது செய்துள்ளனர். மேலும் 60 பேரிடம் விசாரணை நடந்து வருகிறது.
தொடர்ந்து அப்பகுதியில் பதட்டம் நிலவுவதால் அங்கு போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.