104 ரூம் பங்களாவில் ஜெயலலிதா சொகுசு- துரைமுருகன்
சென்னை:அதிமுக ஆட்சியில் ஜூன் 12ம் தேதி காவிரி நீர் திறந்து விடாததற்காக ஜெயலலிதா என்ன தண்டனை பெற்றார் என பொதுப்பணி துறை அமைச்சர் துரைமுருகன் கேள்வி எழுப்பியுள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
நீலகிரி மாவட்டத்தில் சுமார் 8 கோடி ரூபாய் மதிப்புள்ள 104 அறைகள் கொண்ட கொடை நாடு எஸ்டேட் பங்களாவில் தங்கியிருக்கின்ற எதிர்கட்சி தலைவர் ஜெயலலிதா மிக சிரமமப்பட்டு எழுதி ஏடுகளுக்கு அனுப்பியுள்ளார்.
காவிரி பாசன விவசாயிகளுக்கு ஜூன் மாதம் 12ம் தேதி தண்ணீர் தேவை, கருணாநிதியால் கொடுக்க முடியுமா, கொடுக்க முடியும் என கருணாநிதி சட்டமன்றத்தில் உறுதியாக சொல்லவேண்டும், அப்படி தண்ணீர் பெற்று தர முடியாவிட்டால், என்ன தண்டனை கருணாநிதி ஏற்று கொள்ள தயாராக இருக்கிறார் என்பதை சட்டமன்றத்தில் இப்போதே சொல்ல வேண்டும், வெறும் வரட்டு சவடால்கள் கூடாது என ஜெயலலிதாவின் அறிக்கையில் கூறியுள்ளார்.
அதிமுக ஆட்சி காலத்தில் அப்படி தண்ணீர் கொடுக்காததற்காக ஜெயலலிதா என்ன தண்டனை பெற்று கொண்டார்?
இந்த விவரங்களை ஜெயலலிதா தமிழ்நாட்டு மக்களுக்கு சொல்லி விட்டல்லவா, முதல்வரை பார்த்து கேட்க வேண்டும். ஆனால் கடந்த ஆண்டு திமுக ஆட்சியில் ஜூன் மாதம் 12ம் தேதியன்று தண்ணீர் திறக்கப்பட்டது என்பதை மறைந்துவிட்டுதான் இந்த அறிக்கையை தந்துள்ளார்.
முதல்வரை பார்த்து கேள்வி கேட்கும் ஜெயலலிதா, அவர் ஆட்சியில் இருந்த போது இடைக்காலத் தீர்ப்பின்படி 205 டிஎம்சி தண்ணீரை பெற்று தந்தாரா?.
2002ல் 94.87 டிஎம்சி, 2003ல் 65.14 டிஎம்சி, 2004ல் 163.93 டிஎம்சி தண்ணீர்தான் கிடைத்துள்ளது.
அவர் ஒவ்வொரு ஆண்டும் 205 டிஎம்சி தண்ணீரை பெற்று தந்திருந்தால் இந்த கேள்வி கேட்க உரிமை உண்டு.
அதற்கு யோக்கியதை இல்லாத ஜெயலலிதாவிற்கு முதல்வரை கேட்க என்ன அருகதை இருக்கிறது.
ஜெயலலிதா அரசியல் நாகரீகம், பண்பாடு எல்லாவற்றையும் காலில் போட்டு மிதித்துவிட்டு தமிழக சட்டசபையில் உள்ள கட்சிகளின் தலைவர்களை எல்லாம் துதிபாடிகள் என்றும், ஜால்ராக்கள் என்றும் தனது அறிக்கையில் கூறியுள்ளார் என்பதை படிக்கும்போது என்ன செய்தாலும் இவரை திருத்த முடியாது என்பது தெள்ள தெளிவாக புரிகிறது என்று குறிப்பிட்டார்.












Click it and Unblock the Notifications