பாஜக ஆட்சிக்கு வருவதில் சிக்கல்-பாஜக ஆட்சிக்கு வருவதில் சிக்கல்- குமாரசாமிக்கு காங். திடீர் ஆதரவு
பெங்களூரு:கர்நாடக முதல்வர் குமாரசாமி தொடர்ந்து அப்பதவியில் நீடிக்க காங்கிரஸ் ஆதரவு தரும் என அக்கட்சி திடீரென அறிவித்துள்ளதால் கர்நாடக அரசியலில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
கர்நாடகத்தில் தற்போது தேவே கெளடாவின் மதச்சார்பற்ற ஜனதாதளமும், பாஜகவும் இணைந்து கூட்டணி ஆட்சியை நடத்தி வருகின்றன.
இரு கட்சிகளும் செய்து கொண்ட உடன்பாட்டின்படி வரும் அக்டோபர் மாதம் வரை மதச்சார்பற்ற ஜனதாதளம் முதல்வர் பதவியை வகிக்கலாம்.
அதன் பின்னர் முதல்வர் பதவியை பாஜகவுக்கு தர வேண்டும்.
ஆனால் முதல்வர் பதவியை பாஜகவுக்கு தருவதில்லை என்ற முடிவுக்கு கெளடா வந்துள்ளதாக தெரிகிறது. இதன் காரணமாக பாஜக மீது சமீப காலமாக உரசல் போக்குடன் செயல்பட ஆரம்பித்துள்ளார் கெளடா.
இந் நிலையில், குமாரசாமி தொடர்ந்து முதல்வராக நீடிக்க காங்கிரஸ் கட்சி ஆதரவு தரும் என அம்மாநில முன்னாள் முதல்வர் தரம்சிங் கூறியுள்ளார்.
இது கர்நாடக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பெங்களூரில் செய்தியாளர்களிடம் தரம்சிங் பேசுகையில், மதச்சார்பற்ற ஜனதாதளத்துடன் உறவைப் புதுப்பித்துக் கொள்ளும் நேரம் வந்து விட்டது.
குமாரசாமி தொடர்ந்து முதல்வராக இருக்கலாம். இதை காங்கிரஸ் ஆதரிக்கும், வரவேற்கும் என்றார் தரம்சிங்.
இதன்மூலம் கர்நாடகத்தில் ஆட்சியைப் பிடிக்கும் பாஜகவின் திட்டத்தில் மண்ணை அள்ளிப் போட காங்கிரஸ் முயல்வது அப்பட்டமாகியுள்ளது.
தரம்சிங் ஆட்சியைக் கவிழ்த்து விட்டுத்தான் குமாரசாமி தலைமையில் கூட்டணி ஆட்சி அமைந்தது என்பது நினைவிருக்கலாம்.












Click it and Unblock the Notifications