மதுரையில் சித்திரைத் தேரோட்டம்:ஆயிரக்கணக்கான பக்தர்கள் தேர் இழுத்தனர்
மதுரை:மதுரை சித்திரைத் திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சிகளில் ஒன்றான தேரோட்டம் இன்று காலை வெகு விமரிசையாக நடந்தது.
மதுரையில் சித்திரைத் திருவிழா களை கட்டி வருகிறது. நேற்று மீனாட்சி, சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம் நடந்தது. இன்று காலை தேரோட்டம் நடந்தது.
அலங்கரிக்கப்பட்ட பெரிய தேரில் சுந்தரேஸ்வரரும், சிறிய தேரில் மீனாட்சி அம்மனும் அழைத்து வரப்பட்டனர். நான்கு மாசி வீதிகளிலும் தேரோட்டம் நடந்தது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர்.
நாளை மறு நாள் முக்கிய நிகழ்ச்சியான கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. இதற்காக இன்று இரவு அழகர்கோவிலில் இருந்து அழகர், கள்ளழகர் திருக்கோலம் பூண்டு கிளம்புகிறார்.
நாளை மாலை தல்லாகுளத்தில் எதிர்சேவை நிகழ்ச்சி நடைபெறுகிறது. இந்த நிகழ்ச்சிகளையொட்டி மதுரை முழுவதும் பாதுகாப்பு பன்மடங்கு அதிகரிக்கப்பட்டுள்ளது.
திருச்சியிலும் சித்திரை தேரோட்டம்:
இதே போல் திருச்சி தாயுமானவ சுவாமி திருக்கோவிலிலும் இன்று சித்திரை தேரோட்டம் மிகக் கோலாகலமாக நடைபெற்றது.
உச்சிப் பிள்ளையார் திருக்கோவிலில் 14 நாட்கள் கொண்டாடப்படும் சித்திரை திருவிழாவின் 9ம் நாளான இன்று தாயுமான சுவாமிகள் தேரில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.
தாயார் மத்துவ குழலம்மை, கணபதி, முருகன் சிலைகள் தனித்தனியாக அலங்கரிக்கப்பட்ட தேர்களில் பவனி வந்தன.
இதை காண தமிழகம் முழுவதிலிருந்தும் பக்தர்கள் திருச்சியில் குவிந்ததால் திருச்சி நகரமே விழா கோலம் பூண்டுள்ளது.












Click it and Unblock the Notifications