கொலை வழக்கு: இன்பத் தமிழன் சரண்
மதுரை:விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் நகராட்சித் தலைவி சுந்தரியின் கணவர் அண்ணாமலை செல்வம் கொலை வழக்கில் தேடப்பட்டு வந்த முன்னாள் அமைச்சர் இன்பத் தமிழன் இன்று மதுரை நீதிமன்றத்தில் சரணடைந்தார்.
விருதுநகர் நகராட்சித் தலைவி சுந்தரியின் கணவர் அண்ணாமலை செல்வம். இவர் கடந்த ஜனவரி மாதம் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இந்த கொலை தொடர்பாக முன்னாள் எம்.எல்.ஏ தாமரைக்கனியின் மகன்கள் இன்பத் தமிழன், ஆணழகன், தமிழன்பன், தங்கமாங்கனி உள்ளிட்ட 12 பேர் மீது வழக்கு தொடரப்பட்டது.
இதையடுத்து அனைவரும் தலைமறைவாகி விட்டனர். இவர்களில் ஆணழகன் உள்ளிட்ட 7 பேர் மட்டும் கைது செய்யப்பட்டனர். மற்றவர்கள் தொடர்ந்து தலைமறைவாக இருந்தனர்.
இந்த நிலையில் இன்பத் தமிழன் இன்று மதுரை குற்றவியல் நீதிமன்றத்தில் நீதிபதி சுபத்ரா முன்னிலையில் சரண் அடைந்தார். அவரை வருகிற 7ம் தேதி வரை நீதிமன்றக் காவலில் வைக்குமாறும், அன்றைய தினம் அவரை ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறும் போலீஸாருக்கு நீதிபதி உத்தரவிட்டார்.
இதையடுத்து மதுரை சிறையில் இன்பத் தமிழன் அடைக்கப்பட்டார். ஜெயலலிதா அமைச்சரைவயில் அமைச்சராக இருந்தவர் இன்பத் தமிழன். அப்போது தந்தை தாமரைக்கனியை எதிர்த்து படு தீவிரமாக அரசியல் நடத்தியவர். தாமரைக்கனி இறந்தபோது அவரது உடலைப் பார்க்கக் கூட அவருக்குக் கட்சி மேலிடம் அனுமதிக்கவில்லை. கடைசி நிமிடத்தில் சுடுகாட்டுக்கு இன்பத் தமிழன் விரைந்தார். ஆனால் குடும்பத்தினர் இன்பத் தமிழனை அங்கு நுழையக் கூட அனுமதிக்கவில்லை.
கடந்த சட்டசபைத் தேர்தலுக்கு முன்பாக திமுகவுக்குத் தாவினார் இன்பத் தமிழன். இருந்தாலும் அவருக்கோ அல்லது தாமரைக்கனி குடும்பத்தைச் சேர்ந்த யாருக்குமே திமுக மேலிடம் ஒரு சீட் கூட கொடுக்கவில்லை. இந்த நிலையில்தான் கொலை வழக்கில் தாமரைக்கனி குடும்பமே சிக்கி சிதறிப் போனது.