துணை நடிகையாக இருக்கக் கூட தகுதியில்லாத ஜெ: கருணாநிதி கடும் தாக்கு
சென்னை: ஜெயலலிதாவின் துரோகம் குறித்துப் பேசினால் அந்த துரோகத்திற்கே வெட்கம் வந்து ஓடிப் போய் விடும் என முதல்வர் கருணாநிதி கூறியுள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
தமிழகத்தில் நடந்த அனைத்து கட்சி கூட்டத்தில் காவிரி பிரச்சனை பற்றி எந்த தீர்மானமும் நிறைவேற்றப்படவில்லை என ஜெயலலிதா அறிக்கை விட்டுக் கொண்டுள்ளார். ஒரு பொய்யை திரும்ப திரும்ப கூறுவதால் அது உண்மையாகிவிடும் என நம்புகிறவர்களுக்கு அந்த நோய் போக்க எந்த மருந்தும் இல்லை.
துரோகத்தை பற்றி பேச ஜெயலலிதாவிற்கு நிச்சயமாக உரிமை உள்ளது. அமெரிக்க மருத்துவமனையிலிருந்து நண்பர் எம்ஜிஆர் திரும்பி வந்து முதல்வராக பொறுப்பேற்றபோது, தன் கைப்பட ஜெயலலிதா அன்றைய பிரதமர் ராஜீவ் காந்திக்கு கடிதம் எழுதினார்.
அதில் எம்ஜிஆர் முதல்வராக இருக்க தகுதியற்று இருக்கிறார். எனது செல்வாக்கை பார்த்து பொறாமைப் படுகிறார் என குறிப்பிட்டிருந்தார். துரோகம் என்னவென்றால் இதன் மூலம் விளங்கும். இவர் துரோகத்தை பற்றி பேசினால் துரோகமே வெட்கப்பட்டு ஓடிவிடும்.
ஜூன் 12ம் தேதி காவிரி பாசன பகுதிக்கு தண்ணீர் திறந்து விடப்படும் என அறிவிக்க வேண்டும் என ஜெயலலிதா கோரியுள்ளார். அவரது ஆட்சிகாலத்தில் காவிரி டெல்டா பாசனத்திற்கு ஜூன் 12ம் தேதி தண்ணீர் திறந்து விடாத அவருக்கு இந்த கேள்வியை கேட்க என்ன யோக்யதை இருக்கிறது என துரைமுருகன் கேட்டுள்ளார்.
அத்துடன் அணை எப்போது திறக்கப்பட்டது என்ற விபரமும் பட்டியிலிட்டுள்ளார். ஜெயலலிதாவின் அடுத்த அறிக்கையில் இதற்கு விளக்கம் தரட்டும், பார்க்கலாம்.
சிறுவர் சிறுமியருக்கு திருமணம் செய்த கொடுமை தந்தை பெரியார் வாலிபனாக இருக்கும்போது அவரது இல்லத்தில் நடந்துள்ளது.
திருமணம் முடிந்த சில நாட்களில் மணமகன் இறந்துவிட, சிறுவயதிலேயே தாலி இழந்துவிட்ட அந்த பெண்ணுக்கு, தன் வீட்டிலுள்ளவர்களை ஏமாற்றி அந்த காலத்திலேயே புரட்சிகரமாக மறுமணம் செய்து வைத்த நிகழ்ச்சியை பெரியார் படத்தில் பார்த்த போது மெய் சிலிர்கிறது.
இதன் மூலம் அந்த காலத்திலேயே அவர் புரட்சியாளராக இருந்துள்ளார் என்பது விளங்குகிறது. ராஜஸ்தானில் ஒருவர் பெரியார் போல் தோன்றவில்லை என்ன செய்வது, அதனால்தான் அங்கு அரும்புகளின் வாழ்க்கை அழிக்கப்படுகிறது.
பேராசிரியர் அன்பழகனை ஜெயலலிதா கிண்டலாக உதவி பேராசிரியர் என தனது அறிக்கையில் கூறியுள்ளார். ஒரு சிலர் தனது ஆணவத்தை இப்படித்தான் வெளிப்படுத்துவார்கள்.
துணை நடிகையாக இருப்பதற்கு கூட தகுதியற்றவர்களை உமாபதிகளின் உதவியோடு உயரத்தில் ஏற்றி வைத்தார்கள் அல்லவா, அதனால் அவ்வாறு பேசுகிறார் என குறிப்பிட்டுள்ளார் கருணாநிதி.












Click it and Unblock the Notifications