இது தமிழகத்தின் மான பிரச்சனை-துரைமுருகன்
சென்னை:பாலாறு பிரச்சனையில் சட்டப்படி நடவடிக்கை எடுத்து மக்கள் உரிமைக்கு இந்த அரசு பாதுகாப்பு அளிக்கும். இது தமிழகத்தின் உயிர் பிரச்சனை, மான பிரச்சனை என பொதுப்பணித்துறை அமைச்சர் துரைமுருகன் கூறியுள்ளார்
சட்டசபையில் இன்று கேள்வி நேரம் முடிந்ததும் பல்வேறு கவன ஈர்ப்பு தீர்மானங்கள் கொண்டு வரப்பட்டன. அப்போது பாமகவை சேர்ந்த ஜி.கே.மணி,
அமைச்சர் துரைமுரருகன் நேற்று சட்டசபையில் 110வது விதியின் கீழ் ஒரு அறிவிப்பை வெளியிட்டார். பாமக நிறுவனர் ராமதாஸ் கூறிய கருத்தை குறிப்பிட்டு தோழமை கட்சி தலைவர் குறை கூறுவது வருத்தமளிக்கிறது என தெரிவித்தார்.
ஆந்திர அரசு பாலாற்றின் குறுக்கே அணை கட்டுவதை தவிர்க்க போர்கால நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாமக வற்புறுத்தி 5 நாட்கள் போராட்டம் நடத்தியது. அதில் கலந்து கொண்ட ராமதாஸ், பாலாற்றின் குறுக்கே ஆந்திராவும் கர்நாடகவும் தடுப்பணைகள் கட்டிவிட்டன.
இதை தடுக்க அப்போதைய அரசும், ஆட்சியாளர்களும் நடவடிக்கை எடுக்கவில்லை என கூறினார். முதல்வரையோ, அரசையோ குறை கூறவில்லை. துரைமுருகன் பொறுப்பேற்க வேண்டும் என கூறியது உண்மைதான்.
கடந்த பிப்ரவரி மாதம் 5ம் தேதி அணை கட்டுவது தெடர்பாக தமிழக அரசுக்கு ஆந்திர அரசிடம் இருந்து கடிதம் வந்துள்ளது. ஆனால் அது வெளியிடப்பட வில்லை. அது ஏன் என தெரியவில்லை. இதை குற்றச்சாட்டாக ராமதாஸ் தெரிவிக்கவில்லை. ஆந்திர அரசு அணை கட்ட விடாமல் தடுக்க வேண்டும் என்பதற்காக இந்த கருத்தை தெரிவித்தார் என்றார் மணி.
இதற்கு பதிலளித்த துரைமுருகன்,
டாக்டர் ராமதாஸ் கூறியது குற்றசாட்டு அல்ல,இந்த துறையை சேர்ந்த அமைச்சர் என்ற முறையில் இப்பிரச்சனைக்கு நான் பொறுப்பு ஏற்கிறேன், இதிலிருந்து பின் வாங்கப் வதில்லை.
கடந்த பிப்ரவரி 5ம் தேதி வந்த கடிதத்தை மறைக்க வேண்டிய அவசியம் இல்லை. அந்த கடிதத்தில் அணை கட்டுவதாக திட்டம் உள்ளதாக குறிப்பிட்டிருந்ததே தவிர அணை கட்டப்படும் என உறுதி செய்யவில்லை. கடந்த மாதம் 26ம் தேதி மற்றொரு கடிதம் வந்தது. அதில் திட்டம் இறுதி செய்யப்பட்டது என கூறப்பட்டிருந்தது.
முன்பு வந்த கடிதத்தை வைத்து சட்டபடி நடவடிக்கை எடுக்க முடியாது.இப்போது வந்துள்ள கடிதத்தை வைத்து தான் சட்டப்படி நடவடிக்கை எடுக்க முடியும்.
1992ம் ஆண்டு ஒப்பந்தப்படி தமிழக அரசு இந்த திட்டத்தை ஏற்காவிட்டால் ஆந்திர அரசு அணை கட்ட முடியாது. ஏற்கனவே உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டிருக்கிறது. அதை துரிதப்படுத்தி அணை கட்டுவதை தடுக்க தடை கேட்டோம். சட்டப்படி நடவடிக்கை எடுத்து எந்த முறையையாவது கையாண்டு மக்கள் உரிமைக்கு இந்த அரசு பாதுகாப்பு அளிக்கும்.
இது தமிழகத்தின் உயிர் பிரச்சனை, மான பிரச்சனை, எனது மாவட்டத்தின் உணவு பிரச்சனை என்றார் துரைமுருகன்.