போலீஸ் வேலைக்கு லஞ்சம்- வேலைக்குபின் போலீஸ் லஞ்சம்: விஜய்காந்த்
சென்னை:போலீஸ் வேலையில் சேர லஞ்சம் கொடுப்பவர்கள் வேலையில் சேர்ந்ததும் பணம் சம்பாதிக்க பார்க்கிறார்கள். இதனால் தான் லஞ்சம் ஒழியாமல் உள்ளது. கள்ளச் சாராயமும் ஒழியாமல் உள்ளது என தேமுதிக தலைவர் விஜய்காந்த் கூறியுள்ளார்.
தேர்தல் நேரத்தில் சுறுசுறுப்பாக இயங்கிவிட்டு இப்போது நாங்கள் முடங்கிப் போய்விட்டதாக சொல்கிறார்கள். அது தவறு. தினந்தோறும் அறிக்கைகள், சவால்கள் விட்டு என்னால் கட்சி நடத்திக் கொண்டிருக்க முடியாது. நான் வித்தியாசமான அரசியல் நடத்த விரும்புகிறேன்.
![]() |
நாங்கள் பேனர்கள் வைத்தால் அதை தடுக்கிறார்கள். மீறி வைத்தால் அகற்றுகிறார்கள். பேனர்-போஸ்டர் இல்லை என்பதால் கட்சியே காலியாகிவிட்டது என்கிறார்கள். நாங்கள் என்ன தான் செய்வது.
சட்டசபையில் நான் பேசினால் கூட கண்டுகொள்ள மறுக்கிறார்கள் (இவர் பெரும்பாலும் அவைக்கே வருவதில்லை என்பது குறிப்பிடத்தக்கது). கூட்டணி கட்சிகள் கோரிக்கை வைத்தால் மட்டும் ஏதாவது அறிவிப்பு செய்கிறார்கள்.
ஒருவரையொருவர் குறை சொல்வது தான் அங்கு நடக்கிறது. மக்கள் பிரச்சனையை பேசுவதே இல்லை. சண்டை போடுவதும், வெளிநடப்பு செய்வதும் தான் நடக்கிறது.
சட்டமன்ற உறுப்பினர் தொகுதி நிதியை என் தொகுதிக்கு கொடுத்துவிட்டேன். அது தவிர என் சொந்த செலவிலும் நிறைய செய்துள்ளேன். என் எம்எல்ஏ சம்பளத்தையும் தொகுதிக்குத் தான் தருகிறேன்.
கோவில்கள் சீரமைத்துள்ளேன். கிருஸ்துவர்களுக்கும் முஸ்லீம்களுக்கும் உதவியுள்ளேன்.
மதுவை ஒழிக்க முடியாது என கருணாநிதி கூறுகிறார். போலீஸ் லஞ்சம் வாங்குவதால் தான் அந்த காலத்திலிருந்தே மதுவை ஒழிக்க முடியவில்லை.
போலீஸ் வேலையில் சேர லஞ்சம் கொடுப்பவர்கள் வேலையில் சேர்ந்ததும் பணம் சம்பாதிக்க பார்க்கிறார்கள். இதனால் தான் லஞ்சம் ஒழியாமல் உள்ளது. கள்ளச் சாராயமும் ஒழியாமல் உள்ளது என்றார் விஜய்காந்த்.













Click it and Unblock the Notifications