முஸ்லீம் பெண்ணை மணந்த இந்து வாலிபர்கிறிஸ்தவ பெண்ணை ஏமாற்றி திருமணம்!!
சென்னை:முஸ்லீம் பெண்ணை கல்யாணம் செய்து கொண்ட இந்து வாலிபர், அதை மறைத்து விட்டு கிறிஸ்தவப் பெண் ஒருவரையும் திருமணம் செய்து கொண்டார். இதையடுத்து அவரைப் போலீஸார் கைது செய்தனர்.
சென்னை காலடிப்பேட்டையைச் சேர்ந்தவர் சீனிவாசன். செல்போன் வியாபாரம் செய்து வருகிறார். இவருக்கும் ரஸியா பேகம் என்ற முஸ்லீம் பெண்ணுக்கும் கடந்த 2001ம் ஆண்டு காதல் மலர்ந்தது. ரஸியா பேகம் ஆசிரியையாக உள்ளார்.
இருவரும் வேறு வேறு மதம் என்பதால் இருவரது வீடுகளிலும் எதிர்ப்பு கிளம்பியது. இதையடுத்து இந்து முறைப்படி ரஸியா பேகத்தை கல்யாணம் செய்து கொண்டார் சீனிவாசன். அதன் பின்னர் இருவரும் தனி குடித்தனத்தை ஆரம்பித்தனர்.
இருவரது குடும்பத்தினரும் இவர்களை ஏற்றுக் ரொள்ளவில்லை. இருந்தாலும் அதுகுறித்துக் கவலைப்படாமல் இருவரும் வசித்து வந்தனர். ஆரம்பத்தில் சிறப்பாக போய்க் கொண்டிருந்த குடும்ப வாழ்க்கை நாளாக நாளாக கசக்க ஆரம்பித்தது.
அடிக்கடி தனது மனைவியிடம் பணம் கேட்டார் சீனிவாசன். ரஸியா பேகமும் கொடுத்து வந்தார்.
இந்த நிலையில்தான் தனது செல்போன் கடையில் வேலை பார்த்து வந்த மைதிலி என்ற பெண் மீது காதல் கொண்டார் சீனிவாசன். மைதிலியிடம் தனக்கு திருமணம் ஆன விவகாரத்தை மறைத்து அவரைக் காதலிக்க ஆரம்பித்தார் சீனிவாசன்.
மைதிலியின் காதல் விவகாரம் அவரது குடும்பத்தினருக்குத் தெரிய வந்தது. அவர்கள் எதிர்ப்பு தெரிவிக்காமல் கல்யாணத்துக்கு ஒத்துக் கொண்டனர். மைதிலி கிறிஸ்தவப் பெண் என்பதால் அவரது கல்யாணம் பிராட்வேயில் உள்ள கிறிஸ்தவ பேராலாயத்தில் நடந்தது.
இந்த நிலையில் இதுகுறித்துக் கேள்விப்பட்டார் ரஸியா பேகம். அதிர்ச்சி அடைந்த அவர் தேவாலயத்திற்கு விரைந்தார். ஆனால் அதற்குள் கல்யாணம் ஆகி விட்டது. மண்ணடியில் உள்ள கல்யாண மண்டபத்தில் வரவேற்பு நடப்பதாக தெரிய வந்தது.
இதையடுத்து போலீஸுக்குத் தகவல் கொடுத்தார் ரஸியா பேகம். பின்னர் அங்கு விைரந்தார். போலீஸாரும் மண்டபத்திற்கு விரைந்து வந்தனர். நடந்ததை அறிந்து மைதிலி குடும்பம் அதிர்ச்சியில் ஆழ்ந்தது.
இதையடுத்து மைதிலியின் தந்தையும் ஒரு புகார் கொடுத்தார்.
ரஸியா பேகம் மற்றும் மைதிலியின் தந்தை கொடுத்த புகார்களின் பேரில் போலீஸார் வழக்குப் பதிவு செய்து சீனிவாசனைக் கைது செய்தனர்.
இந்து வாலிபர் இரு மதத்தைச் சேர்ந்த பெண்களை மோசடி செய்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.