பி.இ: ஜூலை 9ம் தேதி கவுன்சிலிங்
சென்னை:பொறியியல் கல்லூரி மாணவர் சேர்க்கைக்கான கவுன்சிலிங் ஜூலை 9ம் தேதி நடைபெறுகிறது. இதற்கான விண்ணப்பங்கள் மே 16ம் தேதி முதல் விநியோகிக்கப்படுகிறது.
இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது
பி.இ, பி.டெக், பி.ஆர்க் மாணவர் சேர்க்கைக்கான அறிவிப்பு வருகிற 13ம் தேதி வெளியிடப்படும். 16ம் தேதி முதல் விண்ணப்பம் வழங்கப்படும். பூர்த்தி செய்த விண்ணப்பங்களை ஜூன் மாதம் 5ம் தேதிக்குள் அனுப்ப வேண்டும்.
ஜூன் மாதம் 25ம் தேதி ரேங்க் பட்டியல் வெளியிடப்படும். ஜூன் 30ம் தேதி சிறப்பு ஒதுக்கீடுக்கான பட்டியல் அறிவிப்பு வெளியிடப்படும். ஜூலை மாதம் 9ம் தேதி கவுன்சிலிங் தொடங்கும். ஆகஸ்ட் மாதம் 15ம் தேதிக்குள் கவுன்சிலிங் நடத்தப்பட்டு 20ம் தேதி வகுப்புகள் தொடங்கும்.
அரசு ஒதுக்கீட்டிற்கான இடங்களை நிரப்புவதற்கான ஒற்றைச்சாளர கவுன்சிலங் சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் மட்டும் நடைபெறும். நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களுக்கான மாணவர் சேர்க்கைக்கு அரசால் அங்கீகரிக்கப்பட்ட சுயநிதி தொழிற்கல்வி நிறுவனங்களின் கூட்டமைப்பினால் ஒற்றைச்சாளர கவுன்சிலிங் முறைப்படி மாணவர் சேர்க்கை நடைபெறும்.
இந்த முறையில் நடைபெறாத மாணவர் சேர்க்கை அரசால் எந்த வகையிலும் அங்கீகரிக்கப்படாது.
ரேங்க் பட்டியலில் ஒன்றுக்கும் மேற்பட்ட மாணவர்கள் ஒரே மதிப்பெண்கள் பெற்றிருப்பார்களேயானால் அவர்களுக்கு கீழ்க்கண்ட முறையில் ரேங்க் நிர்ணயம் செய்யப்படும்.
1. கணிதத்தில் பெற்ற மதிப்பெண் சதவீதம்.
2. இயற்பியலில் பெற்ற மதிப்பெண் சதவீதம்.
3. விருப்ப பாடத்தில் பெற்ற மதிப்பெண் சதவீதம்.
4. பிறந்த தேதி.
5. கம்ப்யூட்டர் மூலம் எண்கள் வழங்குதல் என அரசு செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழக பொறியியல் கல்லூரிகளில் கிட்டத்தட்ட 80 ஆயிரத்திற்கும் மேற்பட்ட இடங்கள் உள்ளன. அரசுப் பொறியியல் கல்லூரிகளில் 1900 இடங்களும், அரசு உதவி பெறும் பொறியியல் கல்லூரிகளில் 1680 இடங்களும் உள்ளன.
இதுதவிர அண்ணா பல்கலைக்கழகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள கல்லூரிகளில் 5145 இடங்கள் உள்ளன.












Click it and Unblock the Notifications