சில்லரை வர்த்தகர்களுக்கு தயாநிதி அறிவுரை
சென்னை:சில்லரை வணிகத்தில் பெரிய நிறுவனங்கள் நுழைவதை எதிர்த்துப் போராட்டம் நடத்துவதால் ஒரு பிரயோஜனமும் இல்லை, அவற்றை எதிர்த்து சில்லரை வணிகர்களும் தங்களது வியாபார உத்தியை மாற்றிக் கொள்ள வேண்டும் என்று மத்திய தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் தயாநிதி மாறன் சில்லரை வணிகர்களுக்கு அறிவுரை கூறியுள்ளார்.
சென்னையில் நேற்று வணிகர் தினத்தையொட்டி தமிழ்நாடு வர்த்தகர்கள் நலச் சங்கம் சார்பில் நடந்த கூட்டத்தில் பேசுகையில் இவ்வாறு கூறினார் தயாநிதி மாறன்.
மாறன் பேசுகையில், பெரிய பெரிய நிறுவனங்கள் சில்லரை வர்த்தகத்தில் நுழைந்து விட்டதை எதிர்த்துப் போராட்டம் நடத்துவதால் உங்களது வியாபாரம் பெருகி விடாது. அதனால் எந்தப் பயனும் இல்லை. எனவே அதை விட்டு விட்டு உங்களது வியாபாரத்தை அவர்களுக்கு இணையாக பெருக்குவது எப்படி என்று சிந்தித்து செயல்பட வேண்டும்.
சில்லரை வணிகத்தில் பெரிய நிறுவனங்கள் நுழைவதால் எந்தப் பாதிப்பும் ஏற்படாது. வியாபாரத்தில் உத்திகள் மாறிக் கொண்டேதான் இருக்கும். அதை ஏற்றுக் கொள்ள பழகிக் கொள்ள வேண்டும்.
ஒரு புதிய மாற்றம் வரும்போது அதில் லேசான குழப்பம் ஏற்படத்தான் செய்யும். ஆனால் அது தற்காலிகமானதுதான்.
தமிழகத்தில் முன்பு முதல்வர் கருணாநிதி உழவர் சந்தைகளை ஆரம்பித்தபோது காய்கறிக் கடைக்காரர்கள் பாதிக்கப்படுவார்கள் எனக் கூறப்பட்டது. ஆனால் அப்படி எதுவும் நடக்கவில்லை.
அதேபோல மதிப்புக் கூட்டிய வரி அறிமுகப்படுத்தப்பட்டபோது பெரும் பாதிப்பு ஏற்படும் என சிலர் கூக்குரலிட்டனர். ஆனால் அப்படி எதுவும் நடக்கவில்லை.
எனவே உங்களுக்குப் பிரச்சினை இருந்தால் தாராளமாக முதல்வரை அணுகி பிரச்சினைகளைக் கூறுங்கள். அதை விட்டு விட்டு மற்றவர் சொல்வதைக் கேட்டு அவர்கள் பின்னால் போனால் குழப்பம்தான் ஏற்படும்.
உழவர்கள் நாட்டின் முதுகெலும்பு என்றால், வர்த்தகர்கள் நாடி நரம்பைப் போன்றவர்கள். எனவே அவர்களின் நலனை முதல்வர் கருணாநிதி உணர்ந்துள்ளார். அவர்களுக்குப் பாதிப்பு ஏற்பட அனுமதிக்க மாட்டார் என்றார் தயாநிதி மாறன்.












Click it and Unblock the Notifications