மகளுடன் குடும்பம் நடத்த மறுத்த மருமகன்உயிரோடு கொளுத்த முயன்ற மாமனார்
கடலூர்:மகளுடன் குடும்பம் நடத்த மருமகன் மறுத்ததால் ஆத்திரமடைந்த பெண்ணின் தந்தை மருமகனை தீவைத்துக் கொளுத்த முயன்று கைதானார்.
கடலூர் மாவட்டம் நெல்லிக்குப்பம் அருகே நெசவனூர் பகுதியைச் சேர்ந்தவர் ஹரிகிருஷ்ணன். இவரது மனைவி விஜயலட்சுமி. இவருக்கு விழுப்புரம் மாவட்டம் அரகண்ட நல்லூர் சொந்த ஊராகும்.
10 ஆண்டுகளுக்கு முன்பு இருவருக்கும் கல்யாணம் நடந்தது. 3 குழந்தைகளும் உள்ளனர். சில காலமாக கணவன், மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இதனால் அடிக்கடி சண்டை நடக்குமாம்.
இந்த நிலையில் சமீபத்தில் இருவருக்கும் சண்டை வந்துள்ளது. கோபித்துக் கொண்டு வீட்டை விட்டு வெளியேறிய விஜயலட்சுமி தனது தாய் வீட்டுக்குச் செல்லாமல் கோவைக்குச் சென்று அங்கு ஒரு கார்மெண்ட்டில் வேலைக்குச் சேர்ந்தார்.
இதை அறிந்த தந்தை மணி அங்கு சென்று மகளை வீட்டுக்கு அழைத்து வந்தார். பின்னர் அவர் நெசவனூர் சென்று மருமகனை தனது வீட்டுக்கு அழைத்து வந்தார்.
அங்கு வைத்து பஞ்சாயத்து நடந்துள்ளது. மகளுடன் ஒழுங்காக குடும்பம் நடத்துமாறு கூறியுள்ளார் மணி. ஆனால் அதை ஏற்க மறுத்து விட்டார் ஹரிகிருஷ்ணன். இதனால் கோபம் கொண்ட மணி உள்ளிட்ட நான்கு பேர் ஹரிகிருஷ்ணனை சரமாரியாக அடித்துள்ளனர்.
இதனால் வேதனை அடைந்த ஹரிகிருஷ்ணன் வீட்டில் இருந்த டீசலை எடுத்து தன் மீது ஊற்றிக் கொண்டு சாகப் போவதாக கூறினார். இதைக் கேட்ட மணி, நீ என்ன சாவு, நானே உன்னைக் கொளுத்தி விடுகிறேன் என்று கூறி தீவைத்துள்ளார்.
உடலில் தீப்பிடித்து எரிந்ததால் துடித்தார் ஹரிகிருஷ்ணன். அக்கம் பக்கத்தினர் அவரை வீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். போலீஸார் வழக்குப் பதிவு செய்து மணி உள்ளிட்ட நான்கு பேரையும் கைது செய்தனர்.












Click it and Unblock the Notifications