துரைமுருகன் ஆவேசம் - அதிமுக கோபம்அவைக் குறிப்பிலிருந்து பேச்சு நீக்கம்
சென்னை:அதிமுக உறுப்பினர் வி.பி.கலைராஜனை பார்த்து பொதுப்பணித்துறை அமைச்சர் துரைமுருகன் ஆவேசமாக பேசிய வார்த்தையை அவைக் குறிப்பிலிருந்து நீக்குமாறு முதல்வர் கருணாநிதி கூறியதைத் தொடர்ந்து அது அவைக் குறிப்பிலிருந்து நீக்கப்பட்டது.
சட்டசபையில், பூந்தமல்லி நீதிமன்றம் தொடர்பாக விவாதம் நடந்தது. அப்போது காங்கிரஸ் மற்றும் பாமக உறுப்பினர்கள் பேசினர். அதற்கு அதிமுக உறுப்பினர் வி.பி.கலைராஜன் தனது இருக்கையில் அமர்ந்தபடியே ஏதோ கூறினார்.
இதைப் பார்த்ததும் ஆவேசமடைந்த அமைச்சர் துரைமுருகன் சட்டென்று எழுந்து படு கோபமாக கலைராஜனை நோக்கி கடுமையாக சில வார்த்தைகளைக் கூறினார்.
இதைக் கேட்டதும் கலைராஜனும் ஆவேசமடைந்து பதிலுக்கு கோபமாக பேசினார்.
இதனால் அவையில் பரபரப்பு ஏற்பட்டது. ஒரு அமைச்சர் இப்படி ஒரு வார்த்தையைப் பயன்படுத்தலாமா என்று அதிமுகவினர் சபாநாயகரிடம் நியாயம் கேட்டனர்.
அப்போது குறுக்கிட்ட முதல்வர் கருணாநிதி, துரைமுருகன் பேசிய வார்த்தையை அவைக் குறிப்பிலிருந்து நீக்குமாறு சபாநாயகருக்கு கோரிக்கை விடுத்தார்.
அதை ஏற்ற சபாநாயகர் ஆவுடையப்பன், துரைமுருகன் பேசியதை அவைக் குறிப்பிலிருந்து நீக்கி உத்தரவிட்டார்.